Saturday, December 10, 2011

மீண்டும் ஆக்கிரமிப்புப் போர் அதே வணிக வடிவில்


           தற்போது அச்சு ஒளி ஊடகங்களின் பேசுபொருளாக்கப்பட்டுள்ள விசயம் சிறுவணிகத்தில் அன்னிய மூலதனத்தை மத்திய அரசுஅனுமதித்தது குறித்துதான் . இதனையொட்டி இந்திய பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளால் அணல் தகிக்கும் நிலையேற்பட்டது. 2011 நவம்பர் 22 துவங்கி டிசம்பர் 7வரை பாராளுமன்றம் முடக்கப்ட்டது. ஒருசில கட்சிகளைத்தவிர ஏனையஎதிர்கட்சிகள் எதிர்த்து போராடி வருகிறார்கள். சிறு வணிக நிறுவனங்கள் ஒரு நாள் கடை அடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை அரசுக்கு சொன்னார்கள்.   இந்த அதிரடிகளால் அசந்துபோன  எது நடந்தாலும் கவலைப்படாமல் கைபேசியும் கையுமாய்த் திரியும் இந்திய குடிமகன்களுக்குக் கூட இது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
          அப்படி என்ன சட்டத்தை;தான் கொண்டுவருகிறது மத்திய அரசு..?  பெரும் தொழில்களையெல்லாம் கூட முழுவதுமாய் விழுங்கி சுக்குக் கசாயம் இல்லாமலேயே செரிமானம் செய்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களை நமது நாட்டில் சிறுவணிகத்திலும் அனுமதிக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அதனை செயல்படுத்தவும்  முனைகிறது. அதாவது காய்கறிக்கடை மளிகடைக்கடைகள் வைக்க அவர்களுக்கும் அனுமதி தருகிறது . எப்படியெனில்  ஒரே பொருளாக விற்றால் 100 சதவீதம்  மூலதனம்  போட்டு அவர்களே செய்யலாம் பல்பொருள விற்பனை என்றால் 51சதவீதம் மூலதனம் போட்டு வணிகம் செய்யலாம் என்பது தான் அந்த சட்டத்தின் சாரம்.
    ஒருமுறை இந்தியாவுக்கு வருகை தந்த 'மைக்ரோ சாப்ட்வோ'; அதிபர் 'பில்க்கேட்ஸ'; சொன்னார். ஏந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தான்  எந்த நேரத்திலும்  தேனீர் குடிக்கும்  மனிதர்களும் கடைகளையும் நான் பார்த்தேன்.  இந்தியாவில் என்னை கவர்ந்தது இதுதான். இதுகுறித்து ஆய்வு செய்வேன்  என்றார். காரணம் பிற நாடுகளில் பருவகால நிலைகளுக்கேற்பவே வௌ;வேறு வகையான பானங்களை பயன்படுத்துவார்கள். இந்தியாவில்தான் காலை, மாலை, இரவு, கோடைவெயில்,அடைமழை என காலமுறையின்றி எப்போதும் தேனீர் கடைகளிலும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதும். போதை அடிமைகளைப் போல டீ அடிமைகள் இந்தியாவில் அதிகம். இதைக்கண்டுதான் இந்த உலகப்பெருமுதலாளி  தேனீர்கடை நடத்திட யோசிப்பதாய் சொன்னார்.
    இப்படி இந்தியாவின் சிறுதொழில்களின் மீது ஓநாயாய் கண் வைத்திருந்த வெளிநாட்டு பெருமுதலாளிகள் அமெரிக்காவின் உதவியுடன் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்து இந்த அனுமதியை பெற்றுள்ளனர். முதல் கட்டமாய் அமெரிக்காவைச் சேர்ந்த 'வால்மார்ட்' பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'கேரிபோர்' இங்கிலாந்தைச் சேர்ந்த 'டெஸ்கோ எனமூன்று ராட்சத நிறுவனங்கள் 53 நகரங்களில் கடைகளை துவங்கிடப் போகிறதாம். 
    வால்மார்ட்டைப் பொருத்தவரை தனது கடையை 20 லட்சம் சதுர அடிப்பரப்பில் 650-லிருந்து 1000 கோடிவரை மூலதனம் போட்டு பல்பொருள் அங்காடிகளை திறக்கப்போகிறதாம்(என்ன சொல்லும் போதே சும்மா அதிருதுல்ல). நீங்கள் ஒரே கடைக்குள் நுழைந்தால் போதும் வேண்டிய எந்தப் பொருளையும் வாங்கிக்கொண்டு அலைந்து திரியாமல் வீட்டுக்கு வந்து விடலாம்.  பொருள்களோடு உங்களுக்கான பொழுதுபோக்கு  அம்சங்களும் இருக்கும் அக-புற  நுகர்வு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்கிறார்கள். தற்போதே உள்ளுர் பணக்காரர்களால் பல நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர்மார்க்கெட் வியாபாரம் சூடுபிடித்துள்ள பகுதிகளை ஆய்வு செய்து பாருங்கள் . அந்த நகரத்திற்கு சூப்பர் மார்க்கெட் வந்த பிறகு 50 சிறு கடைகளாவது மூடப்பட்டிருப்பதை காண முடியும். இந்த நிலையில் பன்னாட்டு  நிறுவனமான வால்மார்ட் அறிவித்திருக்கும்  பிரம்மாண்ட திட்டத்தை அனுமானித்தால்  ஒரு கடையே இந்த அதிரடியென்றால் பிறகடைகளும் சேர்ந்தால்..? மேலும் பல நிறுவனங்கள் இந்த வணிகத்தில் நுழைந்தால் (..ம்  ....இப்பவே கண்ணக்கட்டுதா...?) இந்திய சிறு வணிகச்சமூகமே அதகலமாகிப் போகும்.
    ஆனால் மத்திய அரசோ, ஒரே இடத்தில் உலகத் தரமான பொருள்கள் கிடைக்கும.;  1 கோடிப்பேருக்கு உடனடியாய் வேலை கிடைக்கும் . விவசாயிகள் கூடுதல் பலன்பெருவார்கள் என அம்புலி மாமா கதையைஅள்ளி விடுகிறது.  இதை சில காரியக்காரர்கள் அப்படியே  அனைவருக்கும் அஞ்சல் செய்கிறார்கள்  அப்பாவிகள் சிலரும் இந்த கனவு வலையில் கட்டுண்டு போகவும் விரும்புகிறார்கள்.
    இந்த காரியக்காரர்களான உயர்த்தட்டு வர்க்கத்தினர் மேலைய நாகரீகத்தில் மூழ்கிக் கிடப்பதால் இது போன்ற வசதிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது  அவர்களுக்குத் தேவையான அனைவருக்கும் தேவையானது என நம்ப வைக்கும் ஆளும் வர்க்கங்களின் கொள்கை பிரச்சாரகர்கள் இவர்கள் . எனவே இதை பொதுக் கருத்தாக்கிட முயல்கிறார்கள்.
    ஆனால் இத்தனையையும் மீறி இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது நம்பிக்கையளிக்கிறது. இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையில் இந்த திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் எனபிரதமர் பதறுவது ஏன்...?
    1917-ல் உலகின் முதன் முதலாய் முண்டாசுக் கவிஞன் பாரதி வர்ணித்தபடி ஆகா வென்றெழுந்த யுகப்புரட்சி மூலம் ரஷ்;யாவில் தொழிலாளி வர்க்க அரசு அமைந்தது. அதன் கொள்கையில் , மக்கள் நலனை முன்னிருத்திய திட்டங்கள் அனைத்தும் விடுதலைக்கு  போராடிய அனைத்து நாடுகளின் மக்களிடமும் பெரும் தாக்கத்தை, செல்வாக்கை உருவாக்கியது. நமது விடுதலைக் கவிஞன் பாரதியைப் போல அறிஞர்கள் பலரும் அந்த நாட்டை நேசித்தனர். உலக அரசியல் போக்கை புரட்டிப்போட்ட ரஷ்ய புரட்சியை வியந்து போற்றினார்கள். மக்களின் மனப்போக்கை அறிந்த விடுதலைபெற்ற தேசகத்தின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மக்களிடம் இருந்த சோசலிச தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சோசலிச கருத்துக்களை பேசியது; மட்டுமல்லாமல். சோவியத் அரசை பின்பற்றி பொதுத்துறைகளை கட்டமைத்தார் சமூக நலத்திட்டங்களை தீட்டினார். நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சிக்கு கால இலக்கை தீர்மானித்து அந்த திட்டத்திற்கான பெயரை சோவியத்தின் மாடலாய்  5 ஆண்டு திட்டம் எனபெயர் வைத்து இங்கிருப்பதும் சோசலிசத்தை உள்வாங்கியஅரசுதான் என மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.  அதன் ஒரு பகுதியாக உருவான திட்டங்களில் ஒன்றுதான் சிறு தொழில்களை உருவாக்க ஊக்குவித்தது அதை பாதுகாப்பது அதை வளர்ப்பது என அரசை செயல்படுத்தினார்.
    1980-வரை நேருவின் கொள்கை அடிப்படையிலேயே சிறு தொழில்களை  பாதுகாத்து அவற்றை பாதிக்கும் எதையும் அரசு ஊக்குவிக்காத நிலை இருந்தது.  எனவே தான் 100 கோடிக்குள் மூலதனம் போட்டு நடைபெறும் தொழில்களில் 100கோடிக்கு மேல் மூலதனம் போட தகுதியுள்ள தொழில் நிறுவனங்கள் நுழையக்கூடாது என சட்டப்பாதுகாப்பு இருந்தது.  அதனால் 1500 தொழில்களுக்கு மேல் நடைபெற்ற சிறு தொழில்கள் பாதுகாக்கப்பட்டது.     இதனால்  கோடிக்கணக்கான  குடும்பங்கள் அரசை எதிர்ப்பார்க்காமல் சுயமாய் தங்களின் வாழ்க்கைக்கு வழியை ஏற்படுத்தி கொண்டதுடன்  பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பையும் தந்தனர். 
இந்த நிலையில் தான் உலகை மிரட்டிச் சுரண்டுவதற்கு பெரும் தடையாக இருந்த சோசலிச சோவியத் யூனியன் 1989-90-ல் பின்னடைவை சந்தித்தது . இதனால் உற்சாகமடைந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்குமாய்  உருவாக்கி வைத்துள்ள  முதலாளிகளின் காரியக்கமிட்டியான அமெரிக்க தலைமையில் செயல்படும் ஜி 8 நாடுகள் சேர்ந்து உலகை கொள்ளையடிக்க ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு உலகமயம் எனப் பெயரிட்டார்கள்.   இதை உலக நாடுகளை ஏற்க வைக்க, அங்கம் வகிக்க  வலியுறுத்தி பல நெருக்கடிகளை செய்தன. இந்த திட்டத்தை  இந்திய பெரும் முதலாளிகளும் உற்சாகமாய் வரவேற்று இங்குள்ள அரசையும் ஏற்க வைத்தனர் . வேண்டாம் என வந்த எதிர்ப்புகளை கூட உலகமே இணைந்து வருகையில் நாம் தனித்து நின்றால்  ஊரும் உறவும் ஒதுக்கிவைத்துவிடும் என்றார்கள் . இந்தியபொருளாதாரத்தை பாதுகாக்கும்  பலமான அரண்களை உடைத்து நொறுக்கும்  பல நிபந்தனைகளையும் ஏற்றார்கள்.  சமூக நலத்திட்டங்களின் குரல்வலைகளை நெறித்தார்கள். உணவு மானியங்களில் கைவைத்தார்கள்.வேளாண் தொழிலுக்குள்ளும் இவர்களின் வேட்டைக்கு வழி விட்டார்கள். ஏற்றுமதி எனும் பெயரில் உணவு தானிய பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு இங்குள்ளவர்களை பசியின் கொடுமைக்கு பலிகொடுத்தார்கள்.   வாய்க்கும் வயிற்றுக்கும் போராடும்  நிலையில் மக்களை வைத்தால் தான் வசதிகள் கேட்டு  போராடமாட்டார்கள் எனும் சூத்திரத்தை கைக்கொண்டார்கள் . ஆனால் மறுபுறம் 2008 தொடங்கி 2010- வரை மட்டும் இந்திய மற்றும் அந்நிய பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் என்ற வகையில் மட்டும்  14,28,028 ரூபாயை வாரி வழங்கினார்கள். உலக மயத்தை ஆதரித்த பலனை இவர்களே தொடர்ந்து பெற்று வருகிறார்கள். மறுபுறம் தொடர்ச்சியாக ஆண்டு வந்த காங்கிரஸ் பி.ஜே.பி அரசுகளால் வாழ்க்கையே நொறுங்கிப் போய் உருக்குலைந்து போன சாதாரண மக்களுக்கான , மீதம் இருக்கும் நலத்திட்டங்களையும்  பறித்துக்கொள்ள இவர்கள் தயங்கவே இல்லை. இதனால் தான்  ' அன்றைக்கே அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சந்தையாக மூன்றாம் உலக நாடுகளை மாற்றும் சதி இது . இவர்கள் போடும்  நிபந்தனைகளை நாம் ஏற்றால் நமது நாடு  கடும் நெருக்கடியை சந்திக்கும் எனவே உலக மயத்தில் நாம் இணைய தேவையில்லை'  என இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்பை மீறியதன் விளைவுதான் இன்று  நாடு சந்திக்கும் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.  நாடு  ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    இந்தியாவை  பொறுத்தவரை  பொதுத்துறையை பாதுகாப்பு சுயாதிபத்தியம் எனும் வார்த்தைகள் ' அவுட்டாப் பேஷன்' -ஆகிப்போனதால் இடதுசாரிகளின்  குரல்கள் எடுபடவே இல்லை. அதனால்தான் சரிந்து போன அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்தியாவிற்;கு  நலன் பயக்கும் என நமது பிரதமரே  பேசும்  தைரியம் பெற்றார். சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4கோடி குடும்பங்கள் அதில் பணிபுரிவோர்  என சுமார் 25கோடி  குடும்பங்களை பன்னாட்டு  நிறுவனங்களுக்கு பலி கொடுக்க நினைக்கிறார்.
    அரசின் இந்த மக்கள் விரோதப்போக்கு குறித்து உரையாடும் போதும் தவறாமல் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. அதாவது இந்த சிறுவணிகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் தான் மேளாண்மை செய்கிறது என்றும் அந்த சமூகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதுதான் . இது ஒரு சரியானவாதமில்லை. இவர்கள் சொல்லும் சமூகம் மட்டுமல்ல இதர சமூகங்களும் இந்த தொழிலில் உள்ளது. அதில் அவர்கள்; குறிப்பிடும் அந்த சமூகம் கூடுதலாக உள்ளது என்று வேண்டுமென்றால்; கூறமுடியும். அடுத்து இது அவர்களுக்கு மட்டுமான நெருக்கடி –
என்றுசொல்லலப்படுவதும் சரியான விவாதமல்ல குறைந்த வருமானம் உள்ள ஊழியர்கள், தொழிலாளர்கள், முறைசாரா பணியாளர்கள் விளிம்பு நிலை மக்கள் என தங்கள் வருமானத்திற்குள் வாழ்ந்துவிட போராடி வரும் மக்களுக்குஅவர்களின் வருமானப் பற்றாக்குறையை இட்டு நிரப்பும் கடன் உதவியை இந்த வணிக சமூகமே உதவி வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள தேனீர்கடை, மளிகைக்கடை, அரிசிக்கடை என அத்தியாவிசய பொருள்கள்  விற்பனைசெய்யும் கடைகளில் கடன் வாங்கியவர்களின் விபரம் கடன்பாக்கி விபரம்  என குறித்து வைக்கப்படும் நோட்டு இல்லாத ஒரு கடையை நம்மாள் பார்க்க முடியாது. 'வால்மார்ட்டிடம் இந்த உதவியைப் பெறமுடியுமா..? எனவே இந்த திட்டம் அமுலாக்கப்படும் போது மேற்கண்ட குறைந்த வருவாயுள்ள மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மை உணரப்பட்டதால்தான் இந்த திட்டத்திற்கு; அனைத்து பகுதியிலும் எதிர்ப்பு வலுக்கிறது.
    இந்த எதிர்ப்பின் வெக்கை தாளாமல்தான் மத்திய அரசு இந்த திட்டத்தை தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதாய் அறிவித்துள்ளது. கைவிடப்பட்டதாக அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இது பதுங்கிப் பாயும் அரசியல் சதி ஒருபக்கம்  பொதுக்கருத்தை  அறிந்தே அரசு செயல்படும் என அறிவித்துக் கொண்டே எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் பேரங்கள் மூலமான ஆதரவினைப் பெற்று  நினைத்த திட்டங்களை அமுலாக்கி விடுவது காங்கிரஸ், பி.ஜே.பி அரசுகள் கடந்த காலங்களாய் கடைபிடித்து வரும் ஆட்சி வரலாறு.. அதற்கு பொதுத்துறைப்பங்குகளில் அன்னிய மூலதனப் பங்குகளை அதிகரித்தது. அணு ஒப்பந்தம் , அரசு ஊழியர் பென்சன் என ஆயிரம் உதாரணங்கள் உள்ளது. இதில் ஆளும் கட்சி எதிர்கட்சியென  வித்தியாசம் ஏதுமில்லை. அரசின் மக்கள் விரோதத்திட்டங்களைக் கூட அடையாளப் பூர்வமாய் நடத்துவதும் அந்த போராட்டகளினூடக அமெரிக்கத் தூதர்களுடனான சந்திப்புகளை நடத்துவதும் பி.ஜே.பி-யின் வழக்கமாகிவிட்டது. ( இது சும்மா தமாசு நீங்க பயந்துட்டீங்களா.... அய்யோ....அய்யோ...)
    இந்த நிலையில் நாட்டின் தொழில்களை சுயசார்பு பொருளாதாரத்தை, வேளாண் தொழிலை ,  நாட்டின் வளங்களை , நமது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டத்தை கொள்கைப் பூர்வமாக நம்மோடு இணைந்து நிற்கத் தயாராயுள்ள அமைப்புகளுடன் இணைந்து நாமே போராடித்தீரவேண்டும.; அவர் வந்தால்.... இவர் வந்தால்..... என்கிற எதிர்பாhப்;பும,; நம்பிக்கையும,; காத்திருப்பும் நமது இழப்புகளை அதிகமாக்கும் போராட்டங்களின் மூலமே நமக்கான  பாதையை நமது முன்னோர்கள் கண்டடைந்தனர். ஆந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சிதான் நாம.; நாலுபேர் வாழ நாட்டை நடத்துவோரிடமிருந்து மீட்டு நமக்கான தேசமாய் நமது நாட்டைமீட்டெடுக்கும் நேரமிது. நமது வீட்டு ஜன்னலை அதிh வைக்கும் 'வால்மார்ட்டை' கைப்பற்றுவோம் என்ற குரல்களின் வெடியோசை போராட்டம் துவங்கி விட்டது என்பதை முரசறிவிக்கிறது. உடனே முடிவுசெய்ய வேண்டிய தருணம் இது. நாம்  பங்கேற்ப்பாளரா...? பார்வையாளரா..?
            மங்களக்குடி நா.கலையரசன்.-10.12.2011
   

Saturday, November 19, 2011

பேய்காமனுக்கு ஒரு மறுப்பு.

நண்பரே வணக்கம்.
    தோழர்.ச.தமிழ்செல்வன் 'அனணயா வெண்மணி ' இதழில் எழுதியிருந்த மீண்டும் மீண்டும் இமானுவேல் எனும் தலைப்பிலான கட்டுரை குறித்து முகநூலில் நீங்கள் எழுதியிருந்த எதிர்வினையை படித்தேன். தமிழ்செல்வன்  கட்டுரைக்கு எதிர்வினை எழுதிட,  குறைகளைத் தேடி மெனக்கெட்டிருந்தது உங்கள் எழுத்தின் வழியில் அறியமுடிந்தது.
    உங்கள் எதிர்வினையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.  தமிழ்செல்வன் எந்த தகவலை தவறாக அல்லது மாற்றிச் சொல்லியிருக்கிறார்.  ராணுவப்பணியினைத் துறந்து,  தமது சமூகத்தின் மீது கடைபிடிக்கப்படும் இழிவுகளை எதிர்த்து போராடிட முடிவெடுத்தது, தந்தையின் வழியில் காங்கிரசில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தது,  சாதி இழிவை எதிர்க்க தம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி போராட்டத் தளபதியாய் மிளிர்ந்தது, இரட்டை கிளாஸ் முறையை எதிர்த்து மாநாடுகளை நடத்தியது ,  57;  பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத தலித் மக்களை வேட்டையாடியபோது அடித்தால் திருப்பி அடி என சொன்னதோடில்லாமல் தற்காத்து தாக்கும் பயிற்சியினைத்தந்தது.
    பரமக்குடியில்  நடந்த சமாதானக் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் அவதூறான கருத்துகளுக்கு திமிறி  நின்று தெளிவான பதிலைத்தந்தார். தேவர் வரும்போது எழுந்து நிற்கவில்லை, எதிர்த்து பேசினார் என்பதற்காக மறுநாள் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆனாலும் இன்றும் சாதி இழிவு எதிர்ப்பின் அடையாளமாய் , ஆதர்ச சக்தியாய் இருக்கிறார். சாதி ஒடுக்குமுறைக்கெதிராய் போராடுவோரை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யும் போதெல்லாம் இமானுவேல் சேகரனை கொன்றதாகவே எண்ணுகிறார்கள். ஆனாலும் அந்தப் போராட்டத்தினை முன்னெடுக்க மீண்டும் மீண்டும் இமானுவேல் சேகரன்கள் பிறந்தபடியே இருப்பார்கள். இப்போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்று நம்பிக்கையை  விதைத்துள்ளார். இதில் ஏதும் வரலாற்றுப் பிழையோ, நிகழ்வுப்பிழையோ பதியப்படாதபோது ஏன் இந்தப் பதட்டம் , பதிலடி எல்லாம். 
      எனக்குப் புரிந்துகொள்ளும் மேதமையில்லையோ என்னவோ,  ஆனால் ஒன்று எனக்குப் புரிகிறது. தலைப்பு உங்களுக்கு பிடித்ததாக இல்லை. ஆதிக்க சாதிகள் எனும் இடத்தில்  மறவர் அகமுடையார் பிள்ளைமார் என சாதி வகையரா பட்டியல் வகைப்படுத்தவில்லை. தலித் மக்களை அடித்தால் திருப்பி அடி என இமானுவேல்சேகரன் சொன்னது சீனிவாசராவின் தொடர்ச்சி என எழுதியிருக்கக் கூடாது, எடுத்து கையாளப்பட்ட கிராமிய பாடலில் மறவர் என வந்திருக்க வேண்டும் இதுதானே நண்பா உங்கள்  எதிர்பார்ப்பு  எப்படி.....எப்படி...? உங்கள மாதரி சிலபேரால எதையும் குறைசொல்லி எழுதிவிட முடிகிறது (ரூம்போட்டு யோசிப்பீங்களோ..? )
        பரமக்குடி கொடூரம்  நடந்ததற்கான காரணிகளை சமரசமின்றி முன்வைத்து நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க இமானுவேல் சேகரன் உயிரை உரமாக்கி உருவாக்கிய விழப்புணர்வு எழுட்சியின் பக்கம் நின்று சமகால தலித் அமைப்புகளின் தலைவர்களையும் ஜனநாயக சக்திகளையும் தீண்டாமை இழிவுக்கெதிரான போராட்டத்தில் களமாட கைகோர்த்து  அழைத்துச் செல்லும் தமிழ்ச்செல்வன் கட்டுரையை மீண்டும் படித்துப் பாருங்கள் நண்பா.... சில வார்த்தைகளை பிடித்துக்கொண்டு வாதாடத் துவங்குவது தலித்தியமல்ல அது தனித்தியம்
    நான் ஆய்வாளனெல்லாம் இல்லை வாசிப்பில் வசப்பட்ட விபரங்களை நினைவில் வைத்துக்கொண்டே சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறென். நாம் வாழ்கிற சமூகத்தில் சாதிப் பாகுபாட்டிற்கும் தீண்டாமை இழிவிற்கும் எதிராய் நீ;ண்ட நெடுங்காலமாய் நடந்து வரும் போராட்டத்தில் தலித் அல்லாத பலரும் தலித் அமைப்புகள், தலைவர்களுடன் இணைந்து  பங்கேற்றுள்ளனர். என்பதை மறுத்துவிடமாட்டீர்கள்  என நம்புகிறேன்.  இன்றைய சில தலைவர்கள் சொல்வதுபோல இது எங்கள் பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்வோம்  அடிபடுபவர்கள், கொலையாபவர்கள் வலியை அனுபவிப்பவர்கள் நாங்கள்தான் எனவே நாங்களே  பார்த்துக்கொள்வோம் என அன்றைய தலைவர்கள் யாரையும் தடுக்கவில்லை. (இரங்கல் நோட்டில் கையெழுத்துப்போடுவது ஒப்பாரி வைத்து ஓய்வது  என நீங்கள் சொல்வதும் அது தானே நண்பா)  சாதி ஒழிப்பு – தீண்டாமை என்பதெல்லாம் தலித் மக்கள் பிரச்சனையல்ல தேசத்தின் பிரச்சனை என புரிந்து கொண்ட பிற சமூகங்களைச் சேர்ந்தவர் பலர் அன்றைய சமூக கண்ணோட்டங்களை மறுத்து எதிர்த்து போராடினார்கள்.
   அந்த முற்போக்கு பாரம்பரியத்தின் முதிர்ச்சியும் முழமையும் பெற்ற தொடர்ச்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமைக் கெதிரான போராட்டம்.  அந்த செயல்பாட்டின் விரிவாக்கப்பட்ட களம்தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அதில் முன்னனிப்படைவீரனாய் செயல்படும் த.மு.எ.கச-வின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வன். இவர் பார்த்ததை படித்ததை மனதில் படுவதை கவிதையாய் கட்டுரையாய் கதையாய் எழுதிவிட்டு கடமையை முடித்துக்கொள்ளும் படைப்பாளியல்ல. சமூக அநீதிகளுக்கெதிராய் களமாடும் போராளி, ஒரு போராளிக்கு தனது இலக்கினையடையும் போராட்டத்தின் பலத்தினை அதிகரித்துக்கொள்ள கிடைக்கும் ஆயுதம், அமைப்புகள் தனி மனிதர் என அனைத்தையும் கைக்கொள்ளும் தெளிவு தேவை . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தந்த பயிற்சி,  அது பற்றிய கள அறிவும் உள்ளதால் தான் எழுத்தில் அது வெளிப்படுகிறது. அந்த கட்டுரை பலரின் கவனம் கவர்கிறது.
    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவானபிறகு  இணைந்து செயல்பட இசைந்த அமைப்புகளின்  எண்ணிக்கைகளே மார்க்சிஸ்ட் கட்சியின் தெளிவுக்கு கிடைத்த வெற்றியாகும். மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனியை உருவாக்கிய பிறகு தலித் மக்களுக்கு பாதை விட மறுத்த சுவர்கள், கதவினைத் திறக்க மறுத்த ஆலயங்கள்,  தனிக்கிளாஸ் தந்து  ஒதுக்கிவைத்த டீ கடைகள்,  அமர்ந்திட இருக்கை மறுத்த பஞ்சாயத்து அலுவலகங்கள்-  என தீண்டாமையின் சகல வடிவங்களையும் எதிர்த்த போராட்டங்கள் எத்தனை...எத்தனை  அதில் கடலளவு எனச் சொல்லவில்லை கையளவேனும் கிடைத்த வெற்றிகளுக்கு யார்...?  காரணம். 
        எந்தச் சாதிகள் இந்த அநீதிகளை அமுலாக்குகிறதோ அதே சாதியென அடையாளப்படுத்தப்பட்டவர்களே மார்க்சிஸ்டாய் , சி.ஐ.டி.யு-வாய் எல்.ஐ.சி ஊழியர் அமைப்பாய்,  டி.ஒய்.எப்.ஐ,  எஸ்.எப்.ஐ , வி.ச, வி.தொ.ச, மாதர் அமைப்பின் ஊழியராய்,  த.மு.எ.க.ச படைப்பாளியாய் .  மனித நீதியின் மனச்சாட்சியாய் ,  களத்தில் நின்றதால்தான் இதை சாதிக்க முடிந்தது. ஆட்சியாளர்களால் கூட சாதிச்சாயம்  பூசமுடியாத போராட்டங்களை நடத்தியவர்களுக்கு சாதி அடையாளம் பூசிட நினைக்காதீர்கள்
(உங்க வேடெல்லாம் ...ரொம்ம பேடா இருக்கே நண்பா..)
        உங்களிடம் ஒரே ஒரு கேள்வி-
பரமக்குடி துப்பாக்கி சூடுக்கு எதிராய் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாய் (இப்படி குதற்கமாய் எதிர்வினைகள் எழுதுவது தவிர) நீங்கள் செய்தது என்ன...? உங்களின் நினைவுக்காகச் சொல்கிறேன். செப்டம்பர்-11 துப்பாக்கிச்சூடு  கலங்கிப்போன பலர் காவல்துறையின்  காளித்தனத்தினை நினைத்து தயங்கிய நிலையில் 13-ம் தேதியே காவல்துறையின் மிரட்டலை மீறி  உயிர் பறிக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து ஆறுதல் சொன்னது தீ;ண்டாமை ஒழிப்பு முன்னணியும்,   மார்க்சிஸ்ட் கட்சியும் தான் அன்றோடு ஒதுங்கிவிடவில்லை (உங்கள் மொழியில் சொன்னால் அதுதான் இரங்கல் நோட்டிஸ் கையெழுத்துப் போட்டாயிற்றே ) 15-ம் தேதி சிபி.எம் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு வந்தது.
20-ம்தேதி சி.பி.எம் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வந்தார். இப்படி இதுவரை 6முறை மார்க்சிஸ்ட் கட்சி , தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் துயரத்தில் உள்ள பச்சேரி பழனிக்குமார் உள்ளிட்ட 7 குடும்பங்களை சந்தித்துள்ளோம். ஆறதல் சொன்னது மட்டுமல்ல துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பணி இடை நீக்கம் செய்வது,  இழப்பீட்டை 5 லட்சமாக்குவது , குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி,  இரவுத் தேடலை நிறுத்து, 1400பேர் மீதான பொய் வழக்கினை வாபஸ் வாங்கு என அக்-2-ல் போலீஸ் கெடுபிடி மீறி பரமக்குடி ஐந்துமுனையிலேயே ஆர்ப்பாட்டம் , சிபிஐ விசாரணை கோரி உயர்நீதி மன்றத்தில வழக்கு இப்படித் தொடரும் எங்கள் நடவடிக்கை உங்கள் பார்வையில் ஒப்பாரி வைத்துவிட்டு போவதா, நண்பா (உங்க அப்ரோச் ரொம்ப புதுசா இருக்கே)  இல்லை நண்பா .  பாதிக்கபட்டது  எங்கள் வர்க்கமாயிற்றே எனும் உறவு தந்த உணர்வும், உரிமையும்..
        நீண்டபடி போகும் நண்பா முடிப்போம்....
        நீண்டகாலமாய் நீண்டுவரும் சாதி ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட நீளும் கரங்களையெல்லாம் பற்றிக்கொள்வோம் . தமிழ்செல்வன் ஆதிக்க சாதியை மறவர் சாதியென ஏன் குறிப்பிடவில்லையென கோபப்பட்ட நீங்களே அதே சாதியில் பிறந்த திரு.தினகரனை தோழர் என இணைத்துக்கொள்கிறீர்கள் பாருங்கள் அதுதான் சரியான பார்வை - இதே போல எல்லா சமூகத்திலும் தினகரன்கள் இருக்கிறார்கள்- அவர்களையும்  கண்டறிந்து இணைத்துக்கொள்வோம் தனிப்பலம் காட்ட எண்ணும் சிலரால் நாமும் தனிமைப்பட்டுவிடக்கூடாது சாதித்தடைகளை உடைத்தெறிய நமது மன இடைவெளிகளை தோழமை உணர்விட்டு நிரப்புவோம்.
               
                                                                           தோழமை உணர்வுடன் -கலையரசன்.

Tuesday, November 8, 2011

சாதி அடையாளம் தேசிய தலைவர்களுக்கு பெருமை சேர்க்குமா..?

அப்பாடா என பலர் பகிரங்கமாகவும் சிலர் ரகசியமாகவும் பெருமூச்சு விட்டனர். செப்டம்பர் -11 அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் நிலையில் அக்டோபர் -30 பற்றிய திகிலில் 10 மீட்டர் தூரம் கேட்க்கும் அளவுக்கு இதயம் ஆபத்தான அதிகபட்ச  அளவில் துடித்தது. அக்டோபர் 30 எதுவும் பிரச்சனையின்றி முடிந்தது எனும் செய்தியினை ஊடகங்கள் உறுதி செய்த பிறகுதான் இதயத்துடிப்பு நார்மலுக்கு வந்தது.
    12 இலட்சம் மக்கள் வாழ்கிற இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் மக்கள் சுமார் 21மூ  வாழ்கிறார்கள், மானாவாரிப்பகுதியான இந்த மாவட்டத்தில் சொந்த நிலமில்லாதவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக சுமார் 2 இலட்சம் பேர் வரை உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 50மூ  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். 
    நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகள் கூட லாபமற்ற தொழிலாக மாறிப்போன விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிக்கடி போதிய மழையின்றி விவசாயம் கடனுக்குள் தள்ளி விடும் சூழலில் பலர் நகரம் நோக்கி நகரத் துவங்கி விட்டனர். நடுத்தர விவசாயிகளுக்கே இந்த நிலையெனில் விவசாயத் தொழிலாளர்கள் நிலை பரிதாபமாகி விடுகிறது. மாவட்டத்தில் இதுவரை வந்த எந்த அரசுகளும் தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடவில்லை. மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கையை உறுதி செய்வது, கடல் தொழிலும் , விவசாயமும் தான். இவை இரண்டுமே நெருக்கடியைச் சந்திப்பதால் விவசாயத் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களுக்கு பிழைப்புக்காக குடிபெயரும் நிலையுள்ளது. இந்த நிலை தலித் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சமூக மக்களின் பொதுநிலையாகும் . இப்படியான வாழ்வியல்  நிலைகொண்ட மக்களிடம் சாதிப்பகை உணர்வை மட்டும் அழுத்தமாய் பதிய வைத்திட சிலர் செய்து வரும் முயற்சியால் - இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ம் , அக்டோபாம் 30-ம் திகிலூட்டும் தேதியாக மாற்றப்பட்டுவிட்டது .

    தேசத்தின் சமூக அரசியல் பண்பாட்டுத் தலங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்  செய்த ஆளுமைகள் அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்;. சில அரசியல் சுயநலக்காரர்களின் சாதி வணிகவலையில் சிக்கிக்கொண்டு சாதிச் சங்க  உறுப்பினர்களாக்கப்பட்டு விட்டது கொடுமை. இதனால் குறிப்பிட்ட சாதி தவிர பிரசாதி மக்களுக்கு எதிரியாய், அச்சம் விதைக்கும் குறியீடாய்  மாற்றப்பட்டு விட்டார்கள். சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் தலைகளும் தப்பிவிடவில்லை.
    இந்திய குழந்தைகளுக்கு தாத்தாவாக, இந்தியர்களுக்கு மகாத்மாவாக, தேசபிதாவாக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட வாணியச் செட்டியர் சங்க கூட்டத்திற்கு வாசலில் நின்று வரவேற்பது வரலாற்றுச் சோகம்.
    சுதந்திர இந்தியாவின் பெருமுதலாளிகள் அரசு தனது குடிமக்கள் தேவையை நிறைவேற்றி அவரவருக்குறிய பங்கினை வழங்கும் வளர்ச்சியை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி நமது பகுதியை, இனத்தை, சாதியை புறக்கணிக்கிறது இந்த அரசு எனும் அதிருப்தியை குடிமக்களிடம் ஏற்படுத்தியது.
    இந்த அதிருப்தியை முதலீடாய்க் கொண்டு சாதி சார்ந்த அமைப்புகள் பிறந்து வளர்ந்தது பிரதான அரசியல் கட்சிகளில் முக்கிய இடத்தினை இந்த சாதி சார்ந்த பலத்தைக்கொண்டே பற்றிக்கொள்கிறார்கள். இல்லையெனில் அரசியல் பேரத்தில் உரிய பங்கினை பெற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள். பணமும்-பதவியும் கைவந்து சேர படித்தவர் சிலருக்கு இந்த பண்பட்ட திரண் பயன்படுகிறது.    
    தன் சாதியினை ஒன்றிணைக்க, உறுதி செய்ய பிற சாதிகளை எதிராக்கிவிடுவதும்  சாதிப்பெருமையின் தூண்டலுக்காய் பொதுத் தலைவர்களுக்கு சாதி அடையாளம் தருவதும் என தங்களது சாதி வணிகத்தை விரிவுபடுத்துகிறார்கள். இந்த சூது தெறியாமல் விரிக்கப்படும் சாதி பெருமித வலையில் சிக்கி; மயங்கி கிடக்கின்றனர் கணிசமான மக்கள்.
    இந்த மயக்கமும், உணர்வும் குறைந்து விடாமல் காத்துக்கொள்ளவே தலைவர்களின் நினைவுநாட்களை பயன்படுத்துகிறார்களோ எனும் சந்தேகம் ஒவ்வொரு தலைவரின் நினைவு தின ஏற்பாடுகளில் காணமுடிகிறது. அரிவாள் முனையில் ரத்தம் வழியும் ஓவிய விளம்பரங்கள , தங்கள் தலைவர்களின் பாதங்களின் பக்கத்தில் புலி- சிங்கம் , சிறுத்தை வரைந்த பிளக்ஸ் போர்டுகள், வேன்களில் செல்பவர்கள் எழுப்பும் சாதிப் பெருமித வெறிக் கோஷங்கள் என  நினைவு நாளின் நிகழ்வு ஒவ்வொன்றிலும் சாதிவெறித் தூண்டலுக்கான பொறியை விதைக்கிறார்கள். இது தொடர்ந்து சாதி சாயம் பூசப்பட்ட எல்லா தலைவர்களுக்கும் நடத்தப்படும் நினைவு தினத்திலும் தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிகழ்வு சாதிபெருமிதவெறியை அடுத்த தலைமுறைகளுக்கு கைமாற்றிதருவதற்காகவும் - புதுப்பித்துகொள்ளவுமாக மாறி வருகிறது. அதனால் தான் இந்த  நினைவு நாட்களை நிறுத்த வேண்டும் என சிலர் பேசிடத் துவங்கியுள்ளனர். அந்த கருத்துக்களை எளிமையாக ஏற்பவர் எண்ணிக்கையும் வளர்கிறது.
    இது துவக்க நிலையிலேயே தூக்கி எரிய வேண்டிய கருத்து. இது ஆண்டுதோறும் நிகழும் கசப்பான சம்பங்கள் தந்த அச்சத்தால் அல்லது இதை அனுமதிச்சா கண்ட கண்ட சாதித் தலைவருக்கெல்லாம் அரசு விழான்னு போகும் என்கிற மேல்சாதி உணர்வுடன் கூடியதாகவும் இருக்கலாம். எனவே இதை ஒதுக்கி வைத்துவிட்டு சாதிச்சிறைக்குள் சிக்கிக்கிடக்கும் தலைவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் நினைவு தினங்களை அரசு விழாவாக நடத்தி அந்த தலைவர்கள்மீது பற்றுள்ளவர்கள் வந்து அஞ்சலி செலுத்திச் செல்வது போதும் என முடிவெடுப்பது அவசியம். இது பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு மட்டுமல்ல , ஆண்டுதோறும் சாதிவெறியை புதுப்பித்துக் கொள்கிற தினமாக மாற்றி தலைமுறைப் பகையாக்கிடத் துடிக்கும் சாதிவெறி அரசியலுக்கு முடிவு கட்டும். மகாத்மாகாந்தி, வ.உ.சி, காமராஜ், காயிதே மில்லத் , அண்ணா என விரிந்து படர்ந்து வரும் பட்டியலில் இமானுவேல் சேகரனையும் இணைத்து அரசு விழாவாய் நடத்திடவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்த சமூகத்திற்கான பங்களிப்பைக் செய்திருப்பதால் இவர்கள் தேசத்தின் பொதுத்தலைவர்கள். எனவே இவர்களின் சாதி அடையாளம் நீக்கி பொதுவான தலைவர்களாக்கும் கடமை அரசுக்கல்ல சமூக ஒற்றுமையை நேசிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு  அதிகம் உள்ளது.

இவங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க....

வழக்கம் போல உலகச்சந்தையை காரணம் காட்டி  பெட்ரோல்  விலையை 1.80-க்கு உயர்த்தியுள்ளது மத்திய காங்கிரஸ் அரசு, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகள் இதை கடுமையாக கண்டித்துள்ளனர். உலக நாடுகளைச்சுற்றினாலே உள்நாட்டைச் சுற்றுவதாய்தானே அர்த்தம் என திருவிளையாடல் பிள்ளையாராய் புதுவிளக்கம் தரவும் தயாராய் , உலகம் சுற்றி வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 'வேர வழியே இல்லையேப்பா' என கை விரித்துவிட்டார்.  திருடர்களிடமே வீட்டுச் சாவியைக் கொடுக்காதீர்கள் என இடதுசாரிகள் எதிர்த்ததை பொருட்படுத்தாமல் சாவியை மட்டுமல்ல வீட்டையே ஒப்படைத்த காங்கிரஸ் அரசின் மதிமந்திரியான நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியோ பெட்ரோல் விலை குறைப்பு அரசின் கையில் இல்லை நாம்தான்  எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டோமே' என நினைவுப்படுத்துகிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆலோசனை தரும் தலைவர் சோனியா காந்தியோ அவரின் உடல்நிலை மேம்பட மருத்துவர்களின் ஆலோசனையில் அடைக்கலமாகிவிட்டார். இந்திய எதிர்காலத்திற்கான இளைய தலைவர் ராகுல்காந்தியோ  மாநிலம் மாநிலமாய் காடு-மலை-கிராமம் நகரம் பேருந்து –பைக் என ஒரு நல்ல டீ கிடைக்காமல் தேடி அலைகிறார். இந்த அரசின் பங்காளியான தி.மு.க தலைவர் கருணாநிதியோ கட்சியின் எதிர்காலத்தை ஜாமினில் விடுவித்து விட மண்சோறு சாப்பிடாத குறையாய் நீதிமன்றத்திலேயே ஒற்றைக்கால் தவமிருக்கிறார். இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் முதுகை முறிக்கும் விலைவாசி உயர்வால் முழிபிதுங்கி நிற்கும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு மேலும் நிம்மதியைக் கெடுத்துள்ளது.
    மத்திய அரசுக்கு எதிரான இந்த அதிருப்தியை தனக்குச் சாதகமாய் அறுவடை  செய்து கொள்ள நினைக்கும் பி.ஜே.பி-யோ இந்த விலை உயர்வை எதிர்த்து சண்டமாறுதம்  செய்கிறது. சரியாக புரிந்து கொள்வதானால் கடந்த காலத்தை நினைவில் தோண்டி  எடுத்துப் பார்ப்பது அவசியம். அன்றாடம் உயரும் இந்த பெட்ரோல் விலை உயர்விற்கான அடித்தளம் பி.ஜே.பி-யால் போடப்பட்டதுதான். பி.ஜே.பி மத்தியில் ஆட்சி நடத்த வந்த போது  பெட்ரோல் டீசல்;களின் விலைகளை கட்டுக்குள் நிறுத்த ஒரு பொது நிதியம் இருந்தது. எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்த நிதியத்திற்கு பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் வீதம் கட்டிட வேண்டும் என விதி இருந்தது. இப்படி சேரும் நிதியினை வைத்து சர்வதேசச் சந்தையின் விலை உயர்வினை ஈடு  செய்யப்பட்டதால் பெட்ரோல் ,டீசல் விலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.
    இந்த பி.ஜே.பி புன்னியவான்கள் ஆட்சியில் தான் அந்த நிதியத்தை கலைத்து அதிலிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை பொதுநிதியோடு இணைத்து செலவு செய்தார்கள். இன்று சர்வதேச சந்தையின் விலை உயர்வை ஈடுசெய்கிறோம் என நுகர்வோர் பாக்கெட்டிருந்து நேரடியாய் பறிக்கும் வழிப்பறிக்கு வாசல் திறந்து விட்ட இவர்கள் தான் மக்களின் துயரத்திற்கு மாய்ந்து மாய்ந்து அழுகிறார்கள். நமக்கு மறதி இருக்கும் என்ற நம்பிக்கையில்தான்.
    இதைவிட பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் இருப்பது மத்திய-மாநில அரசுகளின்  வரிதான் கடும் வரிவிதிப்பைச் செய்து விலையை உயர்த்திய மாநில ஆட்சியாளர்களும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்கள். எங்கே பிரதமரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு விடுவாரோ என அச்சம் ஏற்படுகிறது.
    இன்றைக்கும் நமது அண்டைநாடுகளான பாக்கிஸ்தான் 26ரூ , பங்களாதேஸ் 22, நேபால் 34, பர்மா 30, ஆப்கானிஸ்தான் 36ரூ  இந்தியாவைவிட ஆட்சியாளர்கள் அதிகம் நேசிக்கும் அமெரிக்காவிலேயே 30 ரூபாய்க்குதான் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கபடும்போது இந்தியாவில் மட்டும் 75 ரூபாயானது எப்படி ..? எல்லாம் மத்திய-மாநில அரசுகளின் வரிகளால் தான்.
            எனவே ஊரோடு சேர்ந்து அழுவதை நிறுத்தி விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்திட வேண்டும்.
•    சர்வதேசச்சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்ற இரக்கங்களை சமன் செய்வதற்கான  பொது நிதியத்தை மீண்டும் உருவாக்குங்கள்.
•    இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்-க்கான  வரி விதிப்பை குறையுங்கள்.
•    தனியார் ஆலை-நிறுவனங்களுக்கு வழங்கும் பெட்ரோலுக்கு ஒரு விலையும்  , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் ,  சாதாரண –மற்றும் நடுத்தர நுகர்வோறுக்கு –வழங்கும் பெட்ரோலுக்கான விலையையும் வகைப்படுத்தி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
•    மத்திய-மாநில அரசுகள் விதித்துள்ள நியாயமற்ற வரிகளை குறைக்க வேண்டும்.

       என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டால் நமது நாட்டிலும் சாதாரணமானவர்கள்  30 ரூபாய்க்கு பெட்ரோல் பெற முடியும்.  ஆனா இவர்கள் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்.

Tuesday, November 1, 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு பதிலில்லா பல கேள்விகள்.

    
செப்டம்பர் 11-தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்;;துறை நடத்திய கொலைவெறி துப்பாக்கிக்சூட்டில் 6 தலித் மக்கள் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்து  ஒரு மாதம் ஆகப்போகிறது. தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் பெரும் மௌனத்தையே கடைபிடித்து வருகிறது. கொலையானவர்கள் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயையும், ஒரு நபர் கமிசன் ஒன்றையும்  அமைத்து விட்டதோடு பிரச்சனை முடிந்து போய் விட்டது என கருதுகிறார்கள் போலும்.
     தங்கள் சமூகத்தின் மீதான அடக்குமுறைகளை தடுக்க முடியாத , அடிப்படைப் பிரச்சனைகளைக்கூட தீர்க்காத , மிகப்பெரும் ஊழல் முறை கேடுகளில் ஊறித்திளைத்த தி.மு.க. அரசை மாற்றிட நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க-வை ஆதரித்து வாக்களித்த மக்கள், சமூக ஒடுக்குமுறை  எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாய் கருதும் தங்கள் தலைவர்  இமானுவேல் சேகரன் குருபூஜையை  சிறப்பாக நடத்திக் காட்டி அரசே இந்த விழாவை ஏற்று நடத்திட கோரிக்கை வைப்பது என்று இந்த ஆண்டு அமைதியாக விழாவை நடத்திட முயன்ற தேவேந்திரகுல மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அந்த விழாவையே யுத்தக்களமாய் மாற்றி, துப்பாக்கிச்சூடு  நடத்தி 6 தலித்துகளை கொலை செய்து தீராத களங்கத்தைச் சுமந்து கொண்டது அ.தி.முக அரசு .
    இத்தனை உயிர் பலிகள் நடந்த பிறகும் தனது பொருப்பில் உள்ள காவல்துறையை பாதுகாக்கும் நோக்கத்தில், கமுதி தாலுகா எம்.பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரின்  படுகொலையோடு தொடர்புப்படுத்தி அதற்கு ஒரு காரணத்தைச்சொல்லி நடந்த கொடுமைக்கு சாதிக் கலவரமுலாம்  பூச முதல்வர் முயன்றது அதிர்ச்சியானது. 9.9.11 அன்று பழனிகுமாரின் படுகொலை நடந்தது.  10-ம்தேதி  முழுவதும் தேவேந்திர குல மக்கள் திரட்சியாய் வாழும் பகுதிகளில் கூட எந்த சிறு அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு எம்.பள்ளபச்சேரி  மாணவரின் படுகொலையுடனான தொடர்ச்சி என சட்டமன்றத்திலேயே  முதல்வர் ஜெயலலிதா பேசியதும், அவர் கூறிய சுவரெழுத்துப் பிரச்சனை மண்டல மாணிக்கத்திற்கு அருகேயுள்ள கிராமங்களுக்கே தெரியாத நிலையில் உலகமே அறிய உரத்து பேசியதற்கும் வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்கிற சந்தேகங்களை பிற சமூகங்களை சேர்ந்த நடுநிலையாளர்களே விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நடந்து முடிந்து போன இந்த கொலை பாதக நிகழ்வுக்கு காவல்துறை சொன்ன காரணம்  ஜான்பாண்டியன் கைது, எதற்காக அவரை கைது செய்ய வேண்டும். அவர் முகவை மாவட்டத்திற்குள் வந்தால் கலவரம் ஏற்பட்டு விடும். அதைத்தடுக்க என்றார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட வல்லநாட்டிற்கு  வருவதற்குமுன் தூத்துக்குடி –நெல்லை-மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவி;ட்டுத்தான் வந்துள்ளார்.  அந்த பகுதிகளில் கலவரம் ஏதும் நடந்ததாய் செய்தி ஏதும் இல்லை, ஆனால் அவரை கைது செய்துவிட்டு பரமக்குடியில் காவல் துறையினரே தங்களின் நரவேட்டையை நடத்தி முடித்தனர்.

    இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு கட்சியின் தலைவரை ஆளுகிற அரசு நினைத்தால் அந்த ஊருக்கு போகாதே. இந்த நிகழ்ச்சிக்கு போகாதே என தடை போட முடியும் மீறி அவர் சென்றுவிட்டால் என்ன ஆவது என முன் கைது செய்யலாம் என்பதும்  தங்கள் அமைப்பின் தலைவரை விடுதலை செய் என தொண்டர்கள் போராடினால் எந்த சட்ட நெறிமுறையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தி கொன்று குவிப்பதும் எந்த வகை ஜனநாயகம்?. 
    புரமக்குடியில்தான் போராடினார்கள். மதுரை சிந்தாமணி, இளையான்குடி போன்ற இடங்களில் ஒரே சமயத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது எதற்காக? இது உள் நோக்கத்துடன் காவல்துறை திட்டமிட்டு நடத்pய கொலைவெறித்தாண்டவம் என உயிhகளை பறிகொடுத்தவர்களின் உறவுகள் எழுப்பும் சந்தேகத்திற்கு எவரும் பதில் தரவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்டவர் யார் என இதுவரை யாருமே சொல்லாதது மர்மமாயுள்ளது.
    பாதுகாப்பிற்காக எனும் பெயரில் பல காவல்துறை உயரதிகாரிகள் ஆயிரக்கணக்கில் காவலர்கள் படையோடு  இருந்தும் 50 பேர்  நடத்திய மறியலைக் கையாள முடியாமல்  போனது தமிழக காவல்துறையின் திரனை கேள்விக்குறியதாய் ஆக்கியுள்ளது.
    தங்களின் பலகீனங்களை மறைக்க மாவட்டம் முழுமைக்கும் 144 தடை ஆணையை அமுலாக்கி 1400 பேருக்கு மேல்  பொய் வழக்கு பதிவு செய்து இரவு தேடல் எனும் பெயரில் தேவேந்திரகுல மக்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் அத்துமீறி நுழைந்து வெறியாட்டம் போட்டதும் , பெண்களிடம் அநாகரீகமாய் நடந்து கொண்டதும் கொடுமையின் உச்சம்.
    இந்த அச்சுருத்தலுக்கு பயந்து ஆண்கள் இரவு நேரங்களில் காடுகளில் பதுங்கி உறங்கியதும் இதில் விசப்பூச்சி மற்றும் பாம்புகள் கடித்து மருத்துவம் பார்க்கும் கொடுமையும் இதில் ஒருவர் இறந்;து போன துயரமும் நிகழ்ந்தது. பிரச்சனையை  தீவிரமாக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனி உள்ளிட்ட அரசியல்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கண்டனம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 144 தடை ஆணை , இரவுத்தேடல் கைவிடப்பட்டாலும் 1400 பேர் மீதான வழக்கு அச்சமூட்டுகிறது.
    செப்டம்பர்-11  துப்பாக்கிச்சூடு நடந்ததும் 13-ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழப்பு முன்னனி 
15-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குழு 21-ம் தேதி உதவி நிதி தலா 25,000 வழங்கி ஆறுதல் கூற வந்த மார்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஸ்ணன் ஆகியோரோடு சென்ற போதும் 2.10.11 அன்று பரமக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதும், கொடுமலூர் வீரம்பல் சடையனேரி பல்லான்வலசை, மஞ்சூர் காக்கனேந்தல் கிராம மக்கள் நடந்த கொடூரமான நிகழ்ச்சியின் அதிர்ச்சி நீங்காத  பல கேள்விகளை முன் வைத்தனர் . அது மனதை உலுக்கியது.
•    அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு  அவங்க தர்ர பரிசு இதுதானா?
•    சுhதிப்பெயரால அடிவாங்கர எங்கள சர்க்காரே அடிக்கிறது நியாயமா?
•    ஏழைகளோட உயிருக்கு விலை 1 லட்சம் தானா?
•    சுட்டுக் கொன்னவங்க ரோட்டுல திரியரப்போ நாங்க மட்டும் எப்ப கைது செய்வாங்களோனு பதட்டத்தோட திரியுரோமே. –கொன்னவங்களுக்கு தண்டனை ஏதும் இல்லையா..?
உள்ளங்களை உறைய வைத்த இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லுமா? புதில் சொல்ல வேண்டும், சொல்லும்படி  வைக்க வேண்டும.

                நா.கலையரசன்,
                 04.10.2011

Sunday, October 30, 2011

அவர்களைத்தெரியும்


தெரியும்
அவர்களுக்கு எங்களையும்
எங்களுக்கு அவர்களையும்
நன்றாகவே தெரியும்

எங்களின் தேவைகளை
அவர்களின் குரல்களே
உரத்துப் பேசியது.

வேதனைகளை வெளிப்படுத்தி
எங்கள் முனங்கள்களை
முழக்க மாக்கியவர்கள்

அவர் விழிகள் தந்த
வெளிச்சத்தில் தான் எங்கள்
வழியினை கண்டுணர்ந்தோம்

எங்கள் வலிகண்டு
துடித்தவர்கள்
துவழும் பொழுதுகளில்
தோள் தந்தவர்கள்


எல்லாம் தெரியும்
நன்றாகவே தெரியும்

அதிகாரம் பிடிக்கும்
அவசரத்தேவைக்காய்
அருகில் வந்து போகும்.
இவர்களையும் தெரியும்

வறுமைச் சாபம் தந்து
வசதி வரம் பெற்றவர்கள்
இவர்களின் முக விலாசம்
முழுவதுமாய் தெரியும்

ஜாமினுக்கும் சம்மனுக்கும்
கோர்ட்டில் கிடப்போர்க்கு
ஓட்டுப்போட்டது ஒவ்வாதென
உறுதியாய் தெரியும்
வறுமை….
அகழி வீழ்ந்த எங்கள்
வாழ்க்கை மீட்கும் போரில்
செலாவணி ஆயுதத்தின்
தாக்குதலால் தடுமாறி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறோம்

அடுத்தமுறை
வெல்வோம் எனும்
நம்பிக்கையோடு…..

மரணத்தின் - காயங்கள்


அந்த கொடூரம் நடந்து  இரண்டு  மாதம் நிறைவடையப்போகிறது. அதிர்ச்சியில் உறைந்திருந்த இராமநாதபுரம் மாவட்டம் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி விட்டது.  ஆறுதல் சொல்வதற்கென அடுத்து அடுத்து வந்த அரசியல் வாதிகளின் வாகனச் சத்தம் நின்று  போய்விட்டது. கூடி நின்று அழத  ஊரும் கூலி வேலை தேடிச்செல்லத் துவங்கிவிட்டது. ஆனால் கணவர்களை பறிகொடுத்த மனைவிகளும் பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோரும் உயிரோடு இருக்கிறார்கள்  என்பதையே உறுகி வழியும் கண்ணீரே உறுதி செய்கிறது. இதுவெல்லாம் சரி..  இந்த கொடூரத்தை நிகழ்த்திய அரசு என்ன செய்கிறது.? ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்.? ஆறு குடும்பங்களின் சந்தோசங்களுக்கு கொள்ளி வைத்த காவல்துறை  அரசுத்துறைகளில் ஒன்று என்ற வகையில் ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாய் உதவியாய்  பாதுகாப்பாய் இருக்க வேண்டாமா? இந்த திசையையே  மறந்து விட்டார்கள். சாதிச்சாயம் தடவிய  பொய் வார்த்தைகளை சட்ட சபையிலேயே  கொட்டிய  முதல்வரின் செயலை அவரது மனச்சாட்சியே சுட்டதனாலோ  என்னவோ. குண்டூசியை இலவசமாய் கொடுத்தாலே  கும்பலாய் நின்று குரூப் போட்டோ எடுத்து விளம்பரப்படுத்தி குதூகளிக்கும் ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகையைக்கூட அதிகாரிகளை அனுப்பியே கொடுக்க வைத்ததார்கள் .
    அதன்பிறகு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள்  அரசியல் , சமூக அமைப்புகள் முன்வைத்த, நிவாரண நிதியை உயர்த்த வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி தர வேண்டும்.  துப்பாக்கிச்சூட்டை நடத்திய அதிகாரிகள் உடனடியாய் இடை நீக்கம்  செய்யப்படவேண்டும் . போன்ற கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படவே இல்லை.
    இந்த நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியது. ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் வாக்கு வணிக சந்தையில் ஏலம் எடுக்கும் முயற்ச்சியில் கிராமங்களில் உறவுகளை இரண்டாய் கூறுபோடும் பணிகளில் தீவிரமாய் இருந்தார்கள். வெற்றிகளை விலைக்கு  வாங்கி தமிழக மக்கள் தங்கள் பக்கம் என பெருமைபேசிக்கொள்வதற்காய் வீதியெங்கும் பிராந்தி வாசம் , வீடு தோறும் கரன்சி வாசம் என அல்லோகலப்படுத்தினார்கள்.
    இந்த சமயத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்  படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை மீண்டும் ஒருமுறை சந்திப்போமே  என தகவல் தந்துவிட்டு வந்து சேர்ந்தார் .  மூன்றுமுறை சென்று வந்த அந்த ஊர்களுக்கு மறுமுறையும் சென்றோம். நாங்கள் முதலில் சந்தித்தது மஞ்சூர் ஜெயபாலின் மனைவி காயத்திரியை.
மருத்துவ மனையில் இருந்த அவர் பிறந்து ஐந்து நாட்களே ஆன மகனை மடியில்  வைத்தபடி , ஆறுதல்  சொல்ல வந்திருந்த சிலரோடு நடந்த கொடூரத்தை ஆயிரத்து ஓராவது முறையாக  சொல்லிக்கொண்டிருந்தார். நெஞ்சே வெடித்திடும் அளவுக்கு சேர்ந்திருந்த துயரத்தை கண்ணீராய் கரைத்துக் கொண்டிருந்தார்.
    “நான் புள்ளமார் சாதிங்க எம் புருஷன்  எஸ்.சி-ங்க நாங்க ரெண்டுபெரும் விரும்பினோம். முதல்ல எதிர்த்த எங்க அம்மாவும் , அப்பாவும் என்னோட உறுதியால புள்ளை வாழ்க்கைதானே முக்கியம்  ஊறுக்கு நாம ஏன் பயப்படனும் , அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை நாம ஏன் தடுக்கனும்னு எங்க அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதிக்க வச்சு எங்க கல்யாணத்தை நடத்தி வச்சாங்க.  நாங்களும் சந்தோசமா வாழ்ந்தோம். எனக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் வலைகாப்பு  சிறப்பா நடந்துச்சு. அந்த சாந்தோஷத்தை முழுசா அனுபவிக்கிரத்துக்குள்ள என் தாலிய அறுத்துட்டாங்களையா… என கதறினார் காயத்திரி.
    பலமுறை கேட்டிருந்தாலும் ஒரு வருடம் கூட  நீடிக்காதபடி  தன் காதல் வாழ்க்கையை ஒரு துப்பாக்கித் தோட்டாவுக்கு பறிகொடுத்த  19 வயது இளம் பெண்ணின் துயரம் அவள் வார்த்தைகளில் வெளிவரும்போது  மனதை பிழிந்தது.
        காதல் என்றால,; அதிலும் வேறு சாதியைச் சேர்ந்தவரோடு என்றால், அதையெல்லாம் விட தலித்துடன் காதல்-கல்யாணம்  என்றால் , சாதிப் பெருமையே சரிந்து விட்டதாய் அதிர்ந்து போகிற சமூகம்  இந்திய சாதிச் சமூகம் இங்கே ஒவ்வொரு மனிதனும் தனது சாதியை தூக்கி சுமந்து திரிகிறார்கள். தனது சாதிப்பெருமைகளை அணிகலனாய் அணிந்து அலைகிறார்கள். எனவே இப்படியொரு காதல் மணம் என்றால் கொலை அயுதம் தூக்கத் தயங்குவதில்லை. சாதிப் புனிதம் காக்க நடந்த காதலர்களின் கொலைப் பட்டியல் எண்ணிலடங்காதவை. அந்த கொலைகளை சாதிவெறியால் நடத்தப்பட்டது என்று கூட சொல்லத் தயங்குவார்கள். கௌரவக் கொலைகள் என்றுதான் கதைப்பார்கள். ஆட்சியாளர்கள்  தந்த இந்த அடைமொழித் தைரியத்தில்தான் சாதி வெறியர்கள் தங்கள் சாதிப்புனிதத்தை சமாதிகளின் மேல் நிறுவுவதை தொடர்கிறார்கள் .
        ஆனால் காயத்திரி விசயத்தில் நடந்தது வேறு. காயத்திரி-ஜெயபால் காதலை ஊறும், உறவும் சாதிவெறியும் அனுமதித்தது. அல்லது கண்டுகொள்ளாத நிலையில் தமிழக காவல்துறை ஒரு துப்பாக்கித்தோட்டாவால் பலி கொண்டது. அதிகாரம் பூண்ட சாதி வெறியின் உச்சம்.
        நாட்டின் பல தலைமுறைத் தலைவர்களால் சடங்காய் முழங்கப்பட்டு வரும் சாதி ஒழிப்பு எனும் வார்த்தையை தன் வாழ்க்கையை தந்து செயல்வடிவம் கொடுத்தவர் காயத்திரி.  இந்தியச் சமூகத்தின் இழிவான சாதி அமைப்பின் மீது காறித் துப்பிவிட்டு சென்ற  கம்பீரமான இளம்பெண் காயத்திரிக்கு பாரதிக்கு விழா எடுக்கும் பெரியாரின் வாரிசுகளின் ஆட்சி தந்த பரிசு விதவை எனும் வேதனை வாழ்க்கை.
        மனசை பிசைந்த துயரங்களும் எங்களுடன் ஒட்டிக்கொண்டு உடன் வர அடுத்து சடையனேரி முத்துக்குமாரின் விட்டிற்குச் சென்றோம். இழப்பின் சுவடுகளுடன் இருந்த அந்த வீட்டில் இருண்டுபோன முகத்துடன் அவரின் 22-வயது மனைவி பாண்டீஸ்வரி. தந்தையின் இழப்பை உணர முடியாத பருவத்திலிருந்த இரண்டு குழந்தைகளும்  தாயின் அழுகைக்கு காரணம் தெரியாது பாண்டீஸ்வரியின் முகத்தை பார்த்தபடி இருபக்கமும் அமர்ந்திருந்தனர். வழக்கமான விசாரிப்புகளுடன் அவருக்கு ஆறுதல் சொல்லத் துவங்கினோம். முத்துக்குமார்  கொலை செய்யப்பட்டு  இரண்டுமாதம் முடியப்போகும் நிலையிலும் இன்று தான் அந்த துயரம் நிகழ்ந்தது போல கதறி அழுதது கணவரை இழந்த துயரத்துடன் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தியது.
    “இந்த பச்சைப்புள்ளைகளை வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப்போறேன். இந்தப் புள்ளைகளை எப்படி வளத்து ஆளாக்குவேன் என்னைய தனிமரமா  ஆக்கிட்டாங்களைய்யா..? இனி நான் என்ன செய்வேன் என கூடி நின்றவர்கள் தேற்ற முடியாதபடி கதறினார்.
    போலிசால் கொலை செய்யப்பட்ட அனைவரின் வீடுகளிலும் இந்த சோகம் , அழுகை, கோபம் , ஆற்றாமை இன்னும் வெளியேறவில்லை. கடைசிவரை  நம் கண்களின் ஈரமும் காயவே இல்லை,
    ஆறு தலித் ஏழைகளைக் கொன்று அவர்களின் குடும்பங்களை சீர்குலைத்த கொடுமை எதற்காக  நடத்தப்பட்டது .? தமிழகத்திலுள்ள எந்த சாதித் தலைவருக்கு விழா எடுக்கவில்லை?  தலித் சமூகத் தலைவருக்கு விழா என்றால் பிற சமூகத்தவரைவிட போலிசுக்கு ஏன் இத்தனை வன்மம்?  தொடர்ந்து நடத்தப்படும் இந்த மரண வெறித்தாக்குதல்கள் தலித்துகள்,மலைவாழ் மக்கள் மீது மட்டும்  குறி வைத்து நடத்தப்படுகிறதே ஏன்..?  துப்பாக்கிக்சூடு நடத்தியவர்கள் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்காததுடன் பாதித்த மக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசு அவர்களை திரும்பிப் பார்க்கக்கூட  தீண்டாமையையே கடைப்பிடிப்பது ஏன்..? இப்படி மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில். பாதிக்கப்பட்டவாகள் ஏழைகள், தலித்துக்கள் . இவர்கள் கதறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற சாதி மேலாதிக்க உணர்வு. ஆட்சி, அதிகாரம் அனைத்திலும் ஊடுருவி  நிற்பது தான். ஏன்ற முடிவுக்கே வரமுடிகிறது. எது எப்படியானாலும் அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பினை எவரும் ஈடு செய்யமுடியாது.   என நினைத்தபடி இராமநாதபுரம் நோக்கி புறப்பட்டோம் எங்கள் நினைவுப்பரப்பில் காயத்pரி, பாண்டீஸ்வரியின் துயரம் தோய்ந்த முகங்களும் , அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் முகங்களும் அழுந்தப் பதிந்து கிடந்த அவஸ்தையில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாமலேயே…….
   


Saturday, October 29, 2011

சர்க்காரின் சாதித்திட்டம்

மீண்டும்  ஒரு முறை 
பரமக்குடியிலும் 
எம்மக்களின் 
குருதி  நக்கி குடித்தது 
அதிகார  அரிதாரம்  பூசிய 
சாதி வெறி 
புதையுண்டவர்களின் 
அடையாளம்  விளக்கி 
அதிகாரம்  பரித்தவர்கள் 


அடிமை  சாதிக்கு 
அடையாளம்  எதற்கென 
ஆத்திரம்  கொட்டினார்கள்


ஆள்வோரும் - அரசும் 
மநுவின் ஆலிங்கனத்தில் 
மயங்கி கிடப்பதால் 
சாதி வெறிக்கொம்பு வளர்த்த 
சர்க்கார்  மாடுகள் ... 

ஐந்தாம் வருணமாய்
அடக்கி  வைத்தோரை
 குத்தி  குதறி  உயிர்
  உருவி  எறிந்தது

 ஐந்து முனை சந்திப்பில் 
கொட்டிக்  கிடந்த
இரத்தக் குட்டையில்
உங்கள்  சமத்துவ  முக  மூடி 
கிழிந்து  மிதக்கிறது 

கூட நின்று  கொள்ளி வைத்து
கூடி  நின்று  அழுதால்  
அமைதி  கெடுமென  அலறி
காட்டுக்குள்  விரட்டி  
காவு  கொடுத்தீர்கள் 

உயர்  சாதி  ஆதிக்கம் 
நிலைத்திருக்க  - எங்கள் 
உயிர்  உறிஞ்சிக்  குடித்தே 
உறுதி  செய்கிறார்  என்றால் ....

சாதி ஒழிப்பு  ஒரு 
சாதியையே  ஒழிப்பதென
சர்க்காரும் சேர்ந்திருந்து 
சாதித் திட்டமிடுகிறதோ 

கொடியங்குளம் - வாச்சாத்தி 
தாமிரபரணி  என - உங்கள் 
அதிகார  வெறியாட்டம்  
நீண்டு  வளர்ந்தாலும் 
அழுது ஓய்கிறோம் என
அகந்தை  சுமக்காதீர் 

அழுகை  ... 
ஆத்திரத்தின்  உச்சம்
அழுகைகள்  இணைந்து 
ஆவேசமானால்

உங்களின்  ..... 
எவ்வகை  ஆயுதங்களாலும் 
எதிர்கொள்ள  முடியாது . 

Tuesday, March 22, 2011

இளமையையே பணயமாய்

நீ அருகில் இல்லாத 
வாகனப்பயணம் 
கால் நடைப் பயணத்தை விட 
களைப்பாய்  இருக்கிறது 

நீ உடன்  இல்லாத 
ஒய்வரை 
நெருக்கடியாய் இருப்பினும் 
வெறுமையாய்  இருக்கிறது 

செவிகிரங்குமுன் 
செல்ல குரல் இன்றி 
அருகாமை  ஓசைகள் 
அந்நியமானது

அழகு முக அழுத்தமின்றி 
இதய துடிபோசை
இடைவெளி  விடுகிறது  

உன் சுவாசம்  கலக்காத 
ஆக்சிசனை   ஏற்க்க  
நுரையீரல்  திணறுகிறது 

இருந்தும்   என்ன செய்ய ..?
பணவரவற்ற  எனக்கு 
சன  உறவும் 
மண உறவும் 
பாரமாகிப்போனது

அடிவயிர் எரியும் 
பசி நெருப்பால் நம் 
அன்பின்  அடர்த்தி  
குறைந்திட  கூடாதென 
விரைந்தெடுத்த முடிவிது

உடல்  அணு  அனைத்திலும்  
ஊடுருவி  நின்ற  உன்னை  
விலகி  வாழ  வருமென  
கனவுகூட   சொன்னதில்லை  

பரம்பரை  ஆட்சியாய் 
பத்திரபடுத்துவோர்
தருத்திர சரித்திரத்தை   
திருத்திட  திறனின்றி 
பொருத்துவாழ போதிக்கிறார்

அவ்வபோது  வரும் 
ஐந்தாண்டு   திட்டங்களும் 
ஆன்டைகளையும்
அம்பானிகளையுமே  
அரவணைத்துகொண்டது

அபயக்கரம்  நீட்ட  
எவருமற்ற  நிலையில் 
ஆண்டு  தவணையில்  
அடுத்த நாடே  எனக்கு 
ஆதரவு  தந்தது  

வறுமை  தொலைத்து  
வளமை பெற  நம் 
இளமையை  பணயம்  வைத்த 
இறுதி  போர் இது  
இனியவளே   காத்திரு  

இறுதி காலம்  வரை 
அருகிருப்பேன்  எனும்  
உறுதிமொழி   காத்திட 
ஒப்பந்த நாளின்  
கடைசி   நிமிடத்தில்   
காத்திருகிறது   என் மனசு .......

 






சாட்டையடிக்கரன்

தாளமிடும்  தாரம்  
கர்ணம்  அடிக்கும்  தனையன்
மந்தையில்  மண்டியிடும் 
மாறாத  வாழ்க்கை 
மாற்றிடாத  அரசுகளை
மாற்றாமல்  போனதற்காக 
சந்தையில்  நின்று    
தண்டனை  தருகிறான் 
தனக்குதானே

வெறுமை

உத்தரவேதுமின்றி 
ஊரடங்கி தெரிகிறது     
ஊருக்கு  போயிருக்கிறாள் 
என்  மனைவி

கையாயுதம்

ஏர் கலப்பை  ஏதும் மில்லை 
கருக்கரிவாள்  கையில் இல்லை 
மண்வெட்டி   கடப்பாரை 
கவனத்திலேயே  இல்லை 
டிராக்டர்   வண்டி 
அறுவடை   இயந்திரம்
வாங்கி  வைக்க  வசதி  இல்லை
 மந்தியான  தலைமுறையை
 மனிதராக்கிய  மந்திரக்கோல்
கையாயுதம்  மட்டுமே
கை வசம் உள்ளது -  இதில்
கைகளை  வைத்து
கையால்  வணங்குவதா?
எப்படி  கொண்டாட
ஆயுத  பூஜையை  ....?




Tuesday, February 1, 2011

என்னை தெரிந்தது

பிறை கூட
பௌர்ணமியாய்  தெரிந்தது
என் விழி  சிறைக்குள்
வந்தாள் அவள்

என் வீட்டு  கண்ணாடி
முதல் முறையாய்
மனம் கவரும் அழகு  நீ
என்பதாய் தெரிந்தது

எங்கள் சந்திப்பினை
தரிசித்த கருவை காடெல்லாம்
நந்தவன  பூச்செடியாய்
நிறம் மாறி  தெரிந்தது

வடுக்களை  சுமந்து  நின்ற
கருக்கொள்ளா  வயலில்  கூட
வானவில் தெரிந்தது

மதிய வெயில்  வேர்கள்
என்மீது மட்டும் மழையாய்
இறங்குவதாய்  தெரிந்தது

சாலை இட  வைத்திருந்த
சரளையில்  நடந்த  போதும்
மலர் பாதை  போல்
மிருதுவாய்  தெரிந்தது

அடையாளம்  தெரியாத
அந்நிய முகங்கள்  எல்லாம்
உறவுகளாய்  தெரிந்தன

அடுக்குமோ  நமக்கிதென்ற
அன்னையின்  கடும்  வார்த்தை
தாலாட்டாய்  தெரிந்தது

அன்றாடம்  நாங்கள்  பார்த்ததை
அவள் தந்தை  பார்த்த பிறகுதான்
மனு செய்த  சதி  தெரிந்தது
எனக்கே  தெரிந்தது  நான் யாரென

                   












நான் யார் உனக்கு

மரபணு  தொடர்பற்ற  
நமக்கு  நடுவே  
உறவு  துளிர்  விட்டது  

 கீதை  வழி நின்று  
பலன்  எதிர்பாராதுன்  
குடும்பம்  சுற்றி  வந்தேன் 

 உறவுமுன்  பெருமை  காட்ட  
கையாளிட்ட  வேலையை 
வாயால்  செய்து  வந்தேன் 
கெட்டிக்காரன்  என்றாய்  

கொழுப்பை  குறைக்க  நீ 
ஊரை  சுற்றி  வந்த   போது
உடன் நடந்து களைத்தேன்
பாசக்காரன்  என்றாய் 


இரவு  பகலின்றி  
பனிமலை  வெயிலில்  
வாசலில்  தங்கி 
வீட்டையே  காத்தேன் 
விசுவாசி  என்றாய்  


கண்ணயர்ந்த  வேளையில்
கன்னமிட  வந்தவரை 
சத்தமிட்டு  கதறி 
இரத்தம்  தந்து  தடுத்தேன் 
நன்றி  எனில்  நான் என்றாய் 


ரணம் தந்த  விசனத்தில் 
துடித்துப்போன  எனக்கு 
காயம் உலர்த்தாமல் 
கழற்றிவிட  துணிந்தாய்


எதையும்  தாங்கிட  
மனிதனா.....?  நான் 
பாய்ந்தேன்  உன்  மீதே 
இப்போது  என்னை 
வெறி நாய்  என்கிறாய்  ..




 




அளவீட்டுப் பிழை

கன்னி  களிப்பெனும்  பெயரில் 
என்னை  கழிப்பதற்கு 
உன்னை  முன் காட்டி
ஆயுள்  ஒப்பந்தத்துடன்  
அனுப்பி  வைத்தார்கள் 

அறிமுக நொடிகளில் 
நிறமும்  உருவமும் 
தரமறியும்  தருனமாய் இல்லை 
உடன்  இருந்த  நாளில் 
முரண்  மனிதன்  நீ  என 
புரிதல்  உருவானது  

மனம் புரின்தொன்றாவது 
மனம்  புரிதல்  என்பது 
மனதில் மனம் வைக்காமல் 
தினவெடுக்கும்  உன்  வயதுக்கு 
தீனியாய்  பார்க்கிறாய் 


உறவு  நெறியுனராமல்
உடல்களின்  உராய்வையே 
பேராய்வு செய்து 
பீதி  கொள்கிறாய் 


ஆண்  அடையாளம்முள்ள
யாரோடு  பேசினாலும்  
அகல  கண் விரித்து 
அதிர்வடைகிறாய்  


கைகோர்த்து  தோள்  உரசி 
கடை  வீதி நடந்ததும்  
பேருந்தில்  இடம்   பிடித்து 
அருகமர்ந்து கொண்டதும் 

காய்  கறி  வாங்க  வந்து 
பை  சுமந்து  வந்ததும் 
கழிவறை  கதவு வரை 
உடன் வந்து  போவதும்  

அன்பின்  அறுவடைக்கென 
அகம்  சிலிர்த்தேன்  - நீ  என் 
அவயங்களை  அடை காக்க 
அகழியாய் இருந்திருக்கிறாய்  

தடையும்   கண்காணிப்பும்  
சுயத்தை  தூண்டிவிடும்  
விட்டுவிடு   கணவனே  


அநாகரீக  உன்  அளவீடுகள்  
அண்டை  வீட்டானை  
அழகனாக்கிட  போகிறது  










Sunday, January 30, 2011

நினைவு படிமத்தில்

மேகக்கரை  இல்லா
தூய  வெளிர்  நிறத்தில்
விரிந்த வானமாய்
பரந்து கிடக்கும்
எங்க  ஊரு  கண்மாய்

விடா மழைக்காய்  வீட்டில்
சிறை  இருக்கும்  போதும்
ஆவலில்  மனது
அசைபோடுவது
கண்மாய்  நீரின்
கணம்  பற்றித்தான்

குட்டி  கடலாய்
கொட்டிகிடக்கும்
கண்மாயை  கடந்திட
பயணித்த பறவைகள்
சுவர் மோதிய  பந்தாய்
புறப்பட்ட  இடம்  திரும்பும்

மைய  கண்மாயில்  கால்பதித்து
மூழ்கி  மண்  எடுக்க
ஆம்சட்ரன்கால்      கூட
ஆகதென்பது
அசையா நம்பிக்கை

பிரிந்திட  மனதின்றி
கொக்கும்  நாரையும்
ஒற்றைக்காலில்  நின்று
அலகுகளை  அலசி
நீர் கண்ணாடியில் 
அழகு  பார்த்து
பெருமை கொள்ளும்

காதல்  சோடிக்கு பரிசு தந்து    
போதை பார்வை பெற
நீர்த்திரை  கிழித்து
மீன்க்கொத்தி  பறவை
சாகசம்  செய்யும்

எதிர்  கரை  தொட்டு
இமயம்  தொட்ட  வீரனாய்
தாவணிப் பெண்களின்
கனவுகளை  களவாட
குற்றாலீஸ்வரன்  முயற்சியில்
அரும்பு  மீசைகள்
அணி வகுக்கும்

அரசமரக்  குடை  நிழலில்
காவலுக்காய்   கணபதியும்
காற்றுக்காய்  பெருசுகளும்
கிராமத்து  கடற்க்கரையாய்
கண் மாயே   கலகலக்கும்

பட்ட மரக்கட்டையில்
படகு பயணம்  செய்து
நாயடி  பட்ட தின்னும்
நினைவு படிமத்தில்
நிலைத்திருக்கிறது

பள்ளி  குழந்தைகளின்
உற்சாகதுள்ளளோடு
மடை திறக்க  ஓடி வரும்
தண்ணீரின்  ஓசை
கிராம மனிதர்களின்
நள்ளிரவு  தாலாட்டாய்
தன் நிலை தவற  வைக்கும்

வான்முகம்  விட்டு
சிதறிய  வியர்வை
துளிகளை  சேர்த்து
தண்ணீராய்  தரம்  மாற்றி
தானியம்   விளைந்திட
தந்திரம்  செய்யும்

அறிவியல்  அறிவு  கலந்த
அறிய  திட்டம்  இது  என
ஆர்வம்  மேலிட  வனத்துறை
பூமி  பெண்ணுக்கு
பசுமை  ஆடை  நெய்ய
நீர் வளர்த்த  கண்மாய்குள்
இன்று  காடு  வளர்க்கிறது . 




Monday, January 24, 2011

நெடுங்கனவு

காணிநில கனவை
பாரதியை  தொடர்ந்து
பாட்டனும் கண்டதாய்
பரம்பரை  வரலாறு
பதிந்து வைத்துள்ளது

முற்காலம்  துவங்கி
தற்காலம்  வரை
கற்கால வாழ்க்கை  நடத்தி
வீடு  பேரின்றியே
வீடு  பேரடைந்தனர்  

வியர்வையாய்  கரையும்
உடலின்  சக்தியை
உயிர்பிட்க  மட்டுமே
உதவிய  உதியத்தால்
உறைவிட  ஆசை 
உருப்பெறவில்லை

தொட்டு க்கடந்த 
தேர்தல்  களங்களில்
வீட்டுக்கனவை  எமக்குள்
விதைத்து  வென்றவர்கள்
வீதிக்கொரு  மாளிகை என
சேமித்து கொண்டார்கள் 

நெடுங்கனவை  நிஜமாக்க
உழைப்பை  அடகு  வைத்து
களித்துப்போட்ட  ஓலைகளால்
கட்டி  வாழ்ந்த  குடிசையை
முட்டி சாய்த்தது  அரசு  இயந்திரம்

கண்மாய்ககுள்ளிருந்து
என்  நிலை யறியாமல்
கண்கள் மறைக்கப்பட்ட
 நீதி தேவதையும்
கரையோரம்  விட்டு வெளியேற
கட்டளையிட்டால்

நதிக்கரை தங்கி
நாகரீகம்  தந்தவர்கள்
கம்மாகரையிளிருந்தால்
புதிய  நாகரீகம்
புறப்பட்டு வரும்
தடையினை  விலக்குங்கள்

நாட்டுரிமை  இழந்த 
பாண்டவராய் 
வீட்டுரிமை  கேட்டு
விண்ணப்பம்  செய்கிறோம்
மறு பாரதபோருக்கு
மனு போடாதீர்        

ஏனெனில்
போரின் முடிவு
வேராய்  இருக்காது
உங்களுக்கு 
வேரே      இருக்காது   
     

மாறாதநிலை





நம்ம கிராமங்களில் ஊடக

பாம்பாய் நெளிந்து கிடந்த
செம்மண் வழித் தடங்கள்
தாத்தனின்  முதுகுபோல்
கருன்சளைகளாய்  பளபளக்கிறது

காலிநிற கூரைகள் மாறி
பலநிற  உடையோடு
அணிவகுத்து  வீடுகள்

ஆத்தா சொன்ன
பேய்களின் உருவமாய்
பனைமரத்தை கேலி செய்து
உயரமாய்  செல் டவர்கள்

வீட்டின் தலைமரைக்க
தகுதியற்ற  குடைகலாய்
டி டி எச்  கல்

நடுவாக்கில்  சம்மணமிட்டு
வீட்டாரின் பேச்சை
நிறுத்திவிட்ட கர்வத்துடன்
டி வி க்கள்

பார்வை  படருமிடம்மெல்லாம்
பால்யத்தை துறக்காமல்
சாட்ஸ்  சில் தாத்தாக்கள்

நம்ம  ஊர்  பாட்டிகளின்
காதுகளில்  தண்டட்டியாய்
செல்போன்கள்

வெள்ளைக்காரன்  துப்பி சென்ற
பாசையை  விழுங்கச் செல்லும்
டை கட்டிய  குழந்தைகள்

பாப்பாக்களின் உடைகளில்
பாந்தமாய் எதிர்படும்
குமரி பொண்ணுக

இந்த  நாகரீக  மினுமினுப்பு
வெளிச்சத்தின் ஊடே
ஈய  குவளையில்  டீ குடித்தபடி
ஓரமாய் முனியன்

வெறுமையாய்
டீ  கடை பெஞ்சுகள் 









 









 






Saturday, January 22, 2011

சேதுத் திட்டத்தை செயல்படுத்திட திரளுவோம்!


சேது சமுத்திரத்திட்டம் தமிழக அரசியல் கட்சிகளின் தீர்மானங்கள் அரசியல் தலைவர்களின் பேட்டி‍ பொதுக்கூட்ட பேச்சுக்கள் ஆகியற்றில் தவறாது இடம்பெற்ற திட்டமாகும். 1860‍ல் துவங்கி 2004 வரை ஆய்வு செய்வதை மட்டுமே செய்து பல கோடிகளை செலவு செய்து வந்தார்கள். 2004 பாராளுமன்ற தேர்தலில் இடது சாரிகள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வந்ததும் சேதுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையும் ஆசையும் துளிர்விட்டது.
     அதேபோல் 2005 ஜூலை 2 மதுரையில் திட்டத்திற்கென 2470.40 கோடையை அறிவித்து துவக்க விழா நடைபெற்றது. திட்டப்பணிகள் துவங்கி 600 கோடிக்கு மேல் செலவான பிறகு சேது சமுத்திரத் திட்டமத்தினை 6 வது வழித்தடத்தில் நிறிவேற்றக்கூடாது. ஏனெனில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலம் உடைபடும் என தனது ஆட்சிக் காலத்தில் இந்த வழித்தடத்தை தேர்வு செய்த பி.ஜே.பியே பிரச்னையை கிளப்பி விட்டது. சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றம் போனார். நீதிமன்றம் மாற்றுவழி குறித்து மத்திய அரசு யோசித்தால் என்ன என்று யோசனை கூறியதும், திட்டம் பழையபடி துவங்கிய இடத்திற்கே வந்து கே.பச்சோரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வுக்கென அமைக்கப்பட்டது.


ராமர் போட்ட பாலம்தான் என பி.ஜே.பி நாசா படத்தை ஆதாரமாகக் காட்டியது. நாசாவும் அதை நாங்கள் ராமர் பாலம் என்றெல்லாம் பெயரிடவில்லையே என மறுத்தது. ஆனால் பிஜே.பி ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதை விடுவதாய் இல்லை. ராமாயணத்தில் உள்ளபடி தனுஷ்கோடியிலிருந்து பாலம் போட்டார் என வாதிட்டு சேதுத்திட்டத்தை முடக்கி விட்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களை அடுக்கினாலும் இவர்கள் காதில் விழவில்லை.
                           வால்மீகியின் ராமாயண அடிப்படையில் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலைகளுக்கிடையே உள்ள நீர் சூழ்ந்த மலைதான் 'லங்கா' என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். வால்மீகியின்  ராமாயணக்கதையில் லங்காவுக்குஅருகே 'சுவேலா' என்ற சிறு குன்று இருந்ததாய் வர்ணித்துள்ளனர். அதனடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் அது மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர் அருகில் உள்ளதென்றும் ஆராய்ந்து உறிதி செய்துள்ளார்கள். தற்போதுள்ள இலங்கை சிங்களம் என்றே அழைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 200 கி.மீ வரையறைக்குள் நடந்த ராமாயணக்கதையை 1500 கி.மீ மைல்கள தூரம் கடந்து தமிழகத்தின் அருகே உள்ள இலங்கையோடு இணைத்த வேலையை கி.பி 1000 மாவது ஆண்டு காலத்தில் ராஜேந்திர சோழனின் இலங்கை மீதான போரை நியாயப்படுத்த  சோழர்களின் அரசைப் புலவர்களே செய்துள்ளார்கள் என வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்தாலும் சங்பரிவார் போன்ற அமைப்புகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி.. ராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டாலும் அது ராமாயணத்தில்  உள்ளது என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். நீங்கள் சொல்லும் ராமாயணம் வரலாறல்ல! அது கற்பனையால் புனையப்பட்ட கதை‍..காப்பியம். அதை எப்படி ஏற்பது? 
உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலத்தை விபீஷணன் வேண்டுகோளை ஏற்று ராமபிரானே இடித்து விட்டார். எனக்கூறி இருந்தது.இதைக் கண்டதும் பதறிப்போன சங்பரிவார், 'மத்திய அரசு இப்படிஒ செய்திருக்கக் கூடாது..'என்றதுடன் ராமாயணம் கற்பனைக் கதை என்றதும் எங்கள் நம்பிக்கையைக் கேலி செய்கிறார்கள் என்ற சங்பரிவார் அமைப்புகள், கம்பர் தனது ராமாயனத்தை மெருகூட்டுவதாக கற்பனை கலந்து எழுதினார். அதன் ஒரு பகுதிதான் பாலத்தை உடைத்துவிட்டார் என்பதும் ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள். அனைத்து அறிவியல் வரலாற்று விளக்கங்களையும் இந்து மக்களின் நம்பிக்கை எனச் சொல்லியே முறியடிக்க முயல்கிறார்கள்.

         சிலரது தனிப்பட்ட நம்பிக்கை தேசத்தின் நம்பிக்கையாகாது. எனவே சிலரது நம்பிக்கையைக் காரணம் காட்டி நாட்டிற்கே பயன் தரும் திட்டங்களை  தடுக்கக்கூடாது. நம்பிக்கை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்று இருக்கிறது. ஒருவரே பல நம்பிக்கைகளை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்பரிவார் அமைப்புகளின் நம்பிக்கைகள் ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறாக இருக்கிறது.  ராமேஸ்வரம் பகுதியிலேயே நாமர் பாலம் கட்டியதாக இரண்டு இடங்களைக் காட்டுகிறார்கள். ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து என்றும் இன்னொன்று திருப்புல்லாணியிலிருந்தும் அமைத்தார் என்கிறார்கள் திருப்புல்லாணி திருத்தல புராணத்தில் தனது மனைவியை மீட்க வானரப் படையினருடன் திருப்புல்லாணி வந்த ராமன் கடலில் பாதை அமைக்க தடையாக அலைகள் அதிகமாக இருந்ததால் கடல் அலைகளின் வேகம் குறியும் வரை ஓய்வெடுக்கிறான். ( திருப்புல்லாணி திருத்தலத்தில் மட்டுமே சயனித்திருக்கும் கோலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது)அலையின் வேகம் குறையாத கோபத்தில் அலைகளை நோக்கி அம்பை எய்திட முயல்கிறான். உடனே பதறி ஓடிவந்த சமுத்திர ராஜன், 'எனக்கிட்ட க்டமையை நான் செய்கிறேன்..என் மீது கோபம் ஏன்?' என சாந்தப்படுத்தி 'கடலில் பாலம் அமைக்க இயலாது' என உபாயமும் சொல்கிறான். உனது படைவீரர்களில் மகாவிஸ்வ கர்மாவின் மகன் நளன் இருக்கிறான். அவன் தண்ணீரில் எதைப்போட்டாலும் அது மிதக்கும் எனவே அவனை வைத்துத்தான் பாதை அமைக்க முடியும் என்கிறான். ராமனும் அதை ஏற்ரு புல்லால் பாதை அமைத்ததாகவும் அதனால் திரு+புல்+அணை =திருப்புல்லணை யானது என்கிறார்கள்.
   இதைப்போல கண்டேன் தேவியை என்ற இடம் கண்ட தேவி என்றும் ஜடாயுவின் இறகு சிதறிய இடம் இறவுச்சேரியானதுமாய் தென்னகம் எங்கும் புனைவுகளுக்கேற்ப ஊர்ப்பெயர்களும் ஏராளமாய் உள்ளது. எனவே இதையெல்லாம் வைத்து 'கண்டதேவி' தேவக் கோட்டை பகுதிதான் ஆரண்யக் காண்டப் பகுதி என சொல்ல முடியுமா? நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. ராமர் எனும் தங்கள் கடவுள் கட்டிய பாலம் குறித்த தங்கள் நம்பிக்கையையே விட்டுத் தர முடியாத சங்பரிவார் போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்படி இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களின்  நம்பிக்கைக்குரிய ஆலயங்களை மசூதியை மாதா சிலைகளை உடைக்க முடிகிறது. பிறர் நம்பிக்கையை மதிக்காத இவர்களின் நம்பிக்கையை மட்டும் நாடு மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது. சிலரின் நம்பிக்கையைவிட நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் முக்கியமானது.
              பாக் ஜலசந்திக்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக உள்ள ஆதம்ஸ் பாலம் என்ற மணல் மேடுகளின் குறுக்கே 89 கி.மீ தூரத்திற்கு 82.5 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தூர்வாரி 300 மீட்டர் அளவுக்கு  ஆழப்படுத்தி கப்பல் செல்ல இருவழிப்பாதை அமைப்பதே சேது வமுத்திர திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்து மகா சமுத்திரமும் வங்காள விரிகுடாவும் இணைந்து இலங்கையைச் சுற்றி அலையாமல் நமது நாட்டு கடல் வழிப்போக்குவரத்தை உள்நாட்டு கடல் எல்லைக்குள்ளே செயல்படுத்திட முடியும். இதன்மூலம் பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். (ஆண்டுக்கு 130 கோடி) அன்னியச் செலவாணி கையிருப்பு வளரும். இருக்கும் துறைமுகங்கள் மேம்படும்..புதிய துணைத் துறைமுகங்கள் உருவாகும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். தென் மாவட்டங்களின் முகத் தோற்ற‌ம் மாறும்.  இன்றில்லாவிட்டாலும் நாளை சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய புதிய துறைமுகங்கள் ராமேஸ்வரத்தை சுற்றிலும் உருவாகும். அப்படி நடக்கும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளம் பெருகும் சூழல் உருவாகும். இன்று பிழைப்புத் தேடி நாடுவிட்டு நாடு ஓடும் இளைஞர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிட்டும்.
         இதையெல்லாம்விட நமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்தத் திட்டம் பயந்தரும். இப்படிப்பட்ட 150 ஆண்டு கால கனவைத்தான் சங்பரிவார் போன்ற அமைப்புகள் சிதைத்து விட்டனர். சேது சமுத்திரத்திட்டம் அமுலானதும் எங்களால்தான் வந்தது என மார்தட்டியவர்கள் எல்லாம் வாயடைத்துப்போனார்கள்.
 


    

தமிழ்ப் புத்தாண்டு பொழிவு பெற...

தமிழ் புத்தாண்டு என்பது இனி தை முதல் நாளிலிருந்து துவங்கும் என தமிழக அரசின் அறிவிப்புப்படி தமிழ் புத்தாண்டு துவங்கி தன் பயணத்தை துவங்கி விட்டது. இந்த அரசு அறிவிப்பை சிலர் எதிர்த்தாலும் நீண்ட காலமாக தை மாதமே தமிழ் ஆண்டின் துவக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழார்வ அமைப்புகள் தமிழ் அறிஞர்கள் இதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். இதனால் கடந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்த சில கால முறை பழக்கங்கள் சிறிது தடுமாறினாலும் சரிசெய்யப்பட்டு புதிய காலமுறை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு சரி செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த அறிவிப்பும் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு துவக்கிவிட்டது என்பதும் தமிழக மக்கள் மத்தியில் எந்த அளவு கொண்டு செல்லப்பட்டது என்பது விவாதத்துக்குறியதாகும்.

                  புத்தாண்டு என்றாலே படித்த நகரத்தில் உள்ள மக்களுக்கு ஜனவரி முதல் தேதிதான் என்றாகிவிட்டது. எனவேதான் ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி விடுகிறார்கள். 'வே இஸ் த பார்ட்டி..' எனத் தேடி ஏதாவது ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சு ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள் வாழ்த்து அட்டை எஸ்.எம்.எஸ் பரிமாற்றங்கள் டிசம்பர் இறுதி நாளில் நள்ளிரவு 12 மணிக்கு காதுகளை செவிடாக்கும் வெடியோசைகளோடு 'ஹேப்பி நியூ இயர்' எனும் உற்சாக கதறல்கள் என ஆங்கிலப் புத்தாண்டு ஆடம்பரமாக வரவேற்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு? நமது மாநிலத்தில் தமிழுக்கு தரப்படும் மரியாதையைப் போலவே நீண்ட காலமாகவே சித்திரை வருடப்பிறப்பும் எந்த முக்கியத்துவம் இன்றியே வந்து போனது.

                        அனாதையாய் வந்து செல்லும்   தமிழ்ப்புத்தாண்டிற்கு கிராமத்து மக்கள்தான் ஆறுதல் தந்தார்கள். தங்களது காரியங்களை தமிழ்தேதி குறித்தே திட்டமிட்டார்கள். சித்திரை முதல் தேதி வீடுகளை சுத்தம் செய்து கோலம் இட்டு பலகாரங்கள் செய்து உற்சாகமாய் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று வழியனுப்புவார்கள். பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என சித்திரை மகள் மகிழ்ச்சியில் திணறும் அளவு கொண்டாடி மகிழ்வது கிராமத்து மக்கள்தான். அந்த மக்களுக்கு தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற தகவல் இன்னும் சென்றடையவில்லை.

                                      அப்படியே ஊடகத்தொடர்புள்ள கிராமங்களுக்குத் தெரிந்தாலும் உழவர் திருநாள் உற்சாகத்தில் கதாநாயகனுடன் வரும் காமெடி நடிகனாக தமிழ்ப்புத்தாண்டு வந்து செல்வது வேதனையான உண்மை. தமிழ்ப்புத்தாண்டின் துவக்கத்தை மாதம் மாற்றி அறிவித்தவர்கள்கூட வாழ்த்து அறிக்கையோடு முடித்துக் கொள்கிறார்கள்.

                             தைமாதம் தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது என்கிற செய்தியை தமிழ் மக்கள் அனைவருக்கும் கொன்டுசேர்க்கும் கடமையினை நிறைவேற்றாததால் கணிசனமான மக்களுக்கு இந்த மாற்றம் தெரிவதே இல்லை. இதனால் இந்தப் புதிய புத்தாண்டு தனது பயணத்தை அரசு முறை‌ பயணம் போல ரகசியமாக துவங்கி முடிந்தது.

                               தமிழ்ப்புத்தாண்டை வசந்தகால குதூகலத்துடன் துவங்கிட வேண்டும் என தமிழறிஞர்கள் முடிவு செய்தது சரியானதுதான் என ஏற்கப்பட்டுவிட்ட நிலையில் அதை சிறப்பாக துவங்கிடவும் வழியினை கண்டுபிடித்திட வேண்டும். காலம்காலமாய் கிராம விவசாய மக்களில் விழாவாக நிலைபெற்றுவிட்ட உழவர் திருநாள் அன்று புத்தாண்டும் துவங்குவதால் உழவர் திருநாளே முன்னிற்கிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு தனிச்சிறப்பின்றி போய்விடுகிறது. எனவே தமிழ்ப்புத்தாண்டை தனித்தன்மையுடன் தமிழர்கள் கொண்டாடிட வழி காண வேண்டும்.

                                 புத்தாண்டு துவங்கி முடிந்த பிறகு அடுத்த புத்தாண்டையாவது வாண வேடிக்கைகளோடு கொண்டாடுங்கள் என அறிவிப்பு செய்வதால் எந்த மாற்றமும் வந்து விடாது. தமிழ்ப் புத்தாண்டினை வரவேற்கும் தினம் ஒன்றினை  அறிவிக்கலாமா? என சிந்திக்க வேண்டும். உழவர் திருநாள் என்பது போகிப்பண்டிகை.. பொங்கல்.. மாட்டுப்பொங்கல்.. காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்நாள் கொண்டாடப்பட்டும் போகி என்பது பழையன கழிதல் என்கிற அர்த்த செறிவை கொண்டுள்ளது. இந்த நாளில் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் நாளாக அறிவித்து அரசும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் மக்கள் பிர‌திநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் விழாவாக கொண்டாடி துவக்கி வைக்கலாம். அது மக்களிடம் ஒரு விழா தன்மை உணர்வை உருவாக்கும்.

                                   பழைய ஆண்டின் கடைசி நாளை வழியனுப்புவதும் புதிய ஆண்டை வரவேற்கவுமான நாளாக இந்த போகி நாள் பொறுத்தமாக இருக்கும் என்பது இந்த கிராமத்தானின் ஆலோசனை! இல்லையெனில் அரசு தமிழறிஞர்களுடன் ஆலோசித்து ஒரு மாற்று வழி காணலாம். இவை இல்லையெனில் அரசு அறிவித்துள்ள இந்த மாற்றம் உணரப்படாமலேயே தமிழர்களின் நீதி நிர்வாகத்தில் தமிழ் என்கிற கனவு போலவே இந்த தேதி மாற்றமும் ஆகி விடக்கூடும்! ஆள்வோரும் அறிஞர்களும் கவனத்தில் கொள்வார்களா?     

அழகு அழகாய்


எங்கள் பிதாக்களும்
பரம பிதாவைப் போலவே
பாட்டன் பாட்டிகளால்
பண்ணைத் தொழுவத்தில்
படைத்தருளப்பட்டனர்

பண்ணை அடிமையெனும்
பாரம் சுமக்க மறுத்து
திமிறி எழுந்ததால்
கூலி என்னுமொரு
புதுப்பெயர் சுமந்து
உயிர்த்தெழுந்தனர்

அழைக்கும் பெயரில்
மாற்றங்கள் வந்தது
இளைப்பாற
இருப்பிடம்தான் இல்லை

இருந்து குடிக்க
விரைவாய்
இடவசதி செய்கிறார்
குடிபுக இடம் கேட்டால்
சிறையறை காட்டி
 சினங் கொள்கிறார்

மறைமுக வரிப்பணம்
காரியக்காரர் கஜானாவுக்கு
தலைமறைவாய் பயணிக்க
திட்டங்களே வழியானதால்

அமரர்களுக்குக்கூட இன்று
அழகழகு பூங்காக்கள்
பாமரர் மட்டும் -என்றும்
பாதையோரங்களில்!


துரோகம்


எதிர்படுபவரிடமெல்லாம்
ஏராளமாய் விபரம் பெற்று
எத்திசையும் தப்பிடாமல்
சிறகு விரித்து தேடினேன்

சில கால செலவிற்கு பிறகு
நினைத்த தகுதிகள்
நிறைந்திருந்ததால்
தேர்வு செய்தேன் உன்னை

ஊரும் உறவும் கூடி
பேசிப்பேசி வியந்தது
உன் அழகு-திரண்பற்றி

விட்டு விட்டு வெகுதூரம்
வீட்டை விட்டு வந்தாலும்
தொட்டுத் தொடர்ந்ததுன்
துணையின் பெருமிதம்

கவர்மெண்டையும்
கடவுளையும் விட
கணக்கற்ற நம்பிக்கை
வைத்தேன் உன்மீது

என் நம்பிக்கை உதிர்த்தாய்
மாற்றான் தொடுதலில்
மனம் நெகிழ்ந்து
உறுதி துறந்தாய்

பறி கொடுத்து
பரிதவிப்போரின்
நீண்ட பட்டியலில்
என்னையும் இணைத்தாய்

வியர்வை விற்று
வைத்திருந்த சேமிப்பு
வேட்டையாடப்பட்டு
வீதியில் நிற்கிறேன்

துரோகம்  இதை
துடைத்தெறிய
அதிர்வெதற்கும்
இசைந்திடாதபடி

பூட்டுகளுக்கொரு
பூட்டுப்போட
புதிய வழி தேடவேண்டும்...!

Friday, January 21, 2011

பனித்துளிப்படுக்கை

நாளை உணவுக்கான
கவலை ஏதுமில்லாமல்
மனசெல்லாம்
மகிழ்ச்சியில் கனத்தது


பனித்துளிகளைக் கோர்த்து நெய்த
படுக்கை விரிப்பில்
படுத்துப்புரள்கிற சிலிர்ப்பு

மயிலிறகு கொண்டு விசிறினால்
வலித்திடுமே என
வருடிவிடும் பரவசம்

ரோஜா இதழ்களை
சேர்த்துக்கட்டி
ஒத்தடமாய் இதயம் தொட்டு
அழுத்திக் கிடக்கும் ஆனந்தம்

குருதிச் சோதனைக்கு
கொசுக்கள் போட்டியிட
பூட்டியிருந்த விழிக்கதவு
விரியத் திறந்தது

நெஞ்சில் முகம் புதைத்து –தன்
பிஞ்சுக்கரங்களால்
என் முகம் தடவ
உறக்கத்தில் என் மகள்
ஆடைகள் ஈரமாய்...

Thursday, January 20, 2011

சாதனையாய் ஒரு சதி...

சுதந்திரப் பெருவெளிச்சம்
திரும்பவே இல்லை
எங்கள் திசைப்பக்கம்

வறுமை இருளுக்குள்
வாழ்க்கையை கண்டறிய
பார்வை தருவதாய்
பலர் வந்து பறையடித்தார்கள்.




ஒளி தருவார் என்று
வலிபொறுத்தோம்
வயதாகிப்போனது
காலத்திற்கும்
எங்களுக்கும்.

மனுக்களைச் சுமந்து கொண்டு
உதவி கேட்டுப் போனவர்களை
உடல்கிழித்து புதைத்தனர்
கழிவுக்கூடையில்

ஆற்றாமை அலறல்களின்
அதிர்வுகளால்
ஆண்டுகள் அறுபதை
தீண்டிடும் தருணம்
ஆள்வோர் அனுப்பி
ஆய்வு செய்தார்கள்

உடைந்த மண்சுவரும்
ஓலைக்குடிசையும்
ஒட்டிய வயிறுமாய்
உழல்வதை உறுதிசெய்து
ஏதுமற்ற தகுதி எமக்கு
ஏராளம் உள்ளதென்றார்

தேசத்தின் பலகோடுகளில்
வறுமை கோட்டிற்கு
கீழ்புறம் உள்ளதால்
எதிர்வரும் காலம்
எங்களுக்கே என்றனர்

காத்திருப்பில் கதவுக்கும்
கால்வலித்தது
உழைத்துப் பிழைக்க
அழைத்து உதவிட
அரசரவம் ஏதுமில்லை.

கலர் டிவி கேஸ் அடுப்பு
கான்கிரீட் வீடென
கேளாமல் வந்தடைந்தது
பெரும்பாடாய் போனது
பயன்படுத்தி பராமரிக்க‌

அரசு தூதர்கள் ஒருநாள்
அவசரமாய் வந்து
அளவீடு செய்து
வறுமைக்கோடு தாண்டி
வளமை பெற்றதாய்
வகைப்படுத்தினார்கள்

வேலைக்கும் கூலிக்கும்
வேள்வி நடக்கையில்
எப்படி நடந்தது இந்த அதிசயம்?

வறுமை பெருங்கோட்டை
வகைமாற்றம் செய்யாமல்
எலிகளை எருதாய்க் காட்டும்
மதிநுட்ப சதி
சத்தமே இல்லாமல்
அரங்கேறுகிறது.

அள்ளித்தந்த
இலவசங்களையே
அளவீடாய்க் கொண்டு!







Saturday, January 15, 2011

அறிமுகம்

ஒரு கிராமத்தானின் வாசிப்பு அனுபவத்தில் கிடைத்த விபரங்களும் விவாதங்களும் விமர்சனங்களும் ரசித்தவைகளும் இந்த வலைப்பூவுக்குள் மலர்ந்திருக்கிறது. படிங்க! படிச்சு உங்க படிப்பு அனுபவங்களையும் இதுல பதிஞ்சு வையுங்க! இந்த அனுபவங்கள் எல்லாம் பிறருக்கும் பயன்படட்டுமே...
சரி...பயணிப்போமா?