Monday, February 27, 2012

தருதலைகளுக்கும் தாலியறுக்க ஒரு மனைவி

  முகநூல் நண்பர்களுடன் எனது துயரத்தையும்  ஒரு ஆலோசனையையும்  பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன். எனது அண்ணன் மகள் வனிதாவுக்கு திருமணம் முடிந்து 7 மாதங்கள் கூட முடியாத நிலையில் அவளின் கணவர் இறந்து விட்டார் எனும் செய்தி இடியாய் இரங்க அனைவரும் ஓடினோம்.
    உடைந்து நொருங்கிப்போன அண்ணன் , ஆத்திர அவதாரத்துடன் தம்பி அவர்களது குடும்பம் அவர்களுடன் என்ன செய்வது என்றே இலக்கறியாமல் நானும் உடன் சென்றேன். எங்கள் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லிடமுடியாது தவித்தோம்.
    காரணம் மருத்துவமனையில் இறந்ததாக தகவல் வந்ததால் அவருக்கு எதற்காக வைத்தியம் பார்த்தார்கள் எனத்தெரியாததால் வந்தது இந்த தவிப்பு.
    எங்கள் அண்ணன் மகளை அழைத்து துயரங்களுக்கிடையே காரணம் அறிய முயன்றோம்.  அவளும் தனக்குத் தெரியாது என கை விரித்ததுடன் 'என்னை அம்மா அப்பாவைப் பார்த்து விட்டு வா' என ஊருக்கு அனுப்பிவிட்டு வைத்தியம் பார்க்கப் போனார்கள் என்றும் ஒரு தகவலைச் சொன்னாள்
    எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவிக்கே தெரியாமல் கணவனுக்குவைத்தியம் நடந்தது என்றால் அவருக்கு என்ன நோய் இருந்தது. குழப்பம் வந்து குவிந்தது. முட்டாளாக்கப்பட்டு விட்டோமோ என்ற அதிர்வில் என்மீது எனக்கே அருவருப்பாய் இருந்தது.
    ஆண்கள் போதை அதிகமானால் உண்மையை உளறிவிடுவார்கள் பெண்கள் சோகத்தை வெளியிட்டு அழும்போது உண்மையை வெளியிட்டு விடுவார்கள் என்பதை என்மனைவி வந்து சொன்ன செய்தி உறுதி செய்தது.
    வுனிதாவின் கணவரின் உறவுப் பெண்கள் வைத்த ஒப்பாரி அழுகைக்கிடையில் அவருக்கு மது-கஞ்சா அடிமை என்பதும் அவனுக்கு டி.பி இருந்ததும் வெளிப்பட்டதுடன் அவனுக்கு பேரு சொல்லா நோய் இருந்ததாகவும்  சந்தேகம் இருந்ததாக அண்டை வீட்டாரும் ஆறுதல் சொன்னார்கள்.
    ஊரும் , உறவும் உதிரியாய் சொன்ன தகவல்களில் உண்மையை உரித்தெடுப்பதற்காக தோழர்கள் உதவியுடன் அவனுக்கான மருத்துவ விபரங்களை சேகரித்தேன்.
    உண்மை என் முகத்தில் காரித்துப்பியது. நீண்டகால நோயாளியான தன் மகனை காப்பாற்றிட முடியாது எனத் தெரிந்தும் கள்ளியும் கற்றாளையும் போட்டு என் மகைனை புதைக்கக் கூடாது என (திருமணமாகாமல் இறந்தால்  சடங்கு ஏதுமின்றி கள்ளி கத்தாளை போட்டுத்தான் புதைப்பார்களாம் ) நோயை மறைத்து  அவசரமாய் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
        எனது அண்ணனும் மகளுக்கு 22 வயதாகி விட்டது எப்பத்தான் கல்யாணம் பன்றது  வர்ர மாப்பிள்ளைளை எல்லாம் நொட்டை சொல்லாதீங்க-டான்னு என்னையும் , தம்பியையும் அடக்கிவிட்டு  அவர்களின் அவசரத்திற்கு  இவரும் உதவி செய்தார்.
        மணப்பந்தலிலேயே பைக் வைக்கவில்லை என்றும் மகளுக்கான நகையில் 2 பவுன் நகை குறைந்ததற்கும் எனது அண்ணன் பட்ட அவமானம்  இதுவரை நாங்கள் சந்திக்காதது.
    மகளின் வாழ்க்கையாயிற்றே  என்று எங்கள் வீட்டு மனையிடத்தில் ஒரு பகுதியை விற்று சமீபத்தில்தான் பைக் வாங்கிக்கொடுத்த கடனையும் நகையையும் சமாளித்தோம்.
    அவமான  நெருப்புகளை அள்ளிக் கொட்டியபோதும் மகளின் வாழ்க்கை என வலி சகித்து புன்னகைத்தோம்.
    ஆனால் 7மாதம் முடியவில்லை அவளின் மண வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.
    என் மனைவி தொடர்ந்து வற்புறுத்தியும் எங்கள் மகளை நான் இப்போதுவரை நேரில் சந்திக்கவில்லை. அந்த தைரியம் எனக்கு வரவில்லை.
    வீடே துயர அமைதியில் ஒவ்வொருவர் மனதிலும் எங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளோம்.
    இNது போல ஏராளமான துயரங்கள் நடந்துள்ளது. ஆனால் யாரும் திருந்தவில்லை. ஒரு பெண்ணெனில் அவளுக்கு வாழ்க்கையில் இறுதி இலக்கே திருமணம் தான் எனும் கருத்தை  சமூகம் பெற்றவர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைத்துள்ளது.
    எனவே தான் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து வைத்து தங்கள் கடமையை முடித்து விடவேண்டும்  என துடிக்கிறார்கள். அந்த அவசரம் அவர்களின் அறிவைத் தின்று விடுகிறது.
       திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது , ஆயிரங்காலத்துப் பயிர் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட திருமணம்  இன்று பகிரங்கமாய் கொள்ளையடிக்கும் திருட்டுத்தனத்தை அங்கீகரிக்கும் அனுமதிச் சீட்டாய் மாறிவிட்டது.
    நமது முன்னோர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் சில நடைமுறைகளை சம்பிரதாயமாய் சடங்காய் உருவாக்கியிருந்தனர்.
    திருவிழாக்களில், விசேச வீடுகளில் ஒரு பெண்ணைப் பார்த்து அந்தப் பெண் பிடித்துவிட்டால் , அந்த பெண் குறித்து விசாரித்து , அந்த ஊருக்கு அருகிலுள்ள தங்கள் உறவுகள் நண்பர்கள்மூலம்  விசாரித்து,  பெண்ணுக்கு திருமணம்  செய்யும்  முடிவில் இருக்கிறார்களா? என அறிந்து கொண்டு பிறகு மாப்பிள்ளையின் நெருங்கிய  உறவினர்கள் நேரில் சென்று கலந்து பேசி பிறகு முறைப்படி பெண்பார்க்கும் சம்பிரதாயம் அரங்கேறும்.
    பெண் வீட்டார்களும் தங்கள் பங்கிற்க்கு மாப்பிள்ளை  விபரங்களை விசாரிப்பார்கள். வீடுபார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, தேதி குறிப்பது எனும் தனிச்சம்பிரதாயங்களே.  மாப்பி;ள்ளை  அவரது பெற்றோர் குறித்து  விபரம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் தான். ஆனால் இந்த நிகழ்வுகள் குறித்த புரிதல்களற்று போனதால் இது விருந்து வைபவங்களாய் மாறிவிட்டது.
    மாப்பிள்ளையின் வீடு பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்களிடம்  மாப்பிள்ளை அவர்கள் பெற்றோர் குறித்து விசாரித்தால்  நல்ல கவனிப்பு, நல்ல விருந்து, வசதியான வீடு எனவே சிலாகிக்கிறார்கள்.
    இதனிடையே திருமண ஏற்பாடுகளும் இன்று தனியார்மயமாகிவிட்டது. கொடுக்கும் கமிசனுக்கு ஏற்ப மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் பெருமைகள் போலியாக கட்டமைக்கப்படுகிறது. நுகர்வு தாக்கங்கள் நிறைந்து போட்டி உலகமாக மாறிப்போன நிலையில் பொருள் சேர்ப்பதிலேயே நேரம் கடந்து விடுவதால்  திருமண தகவல் மையங்கள் , கமிசன் தரகர்களையே  பிள்ளைகளை பெற்றவர்கள் சார்ந்து நிற்க்க துவங்கினார்கதள். இதற்கு பிறகு தான் ஏமாற்று திருமணங்கள் , போலி திருமணங்கள் , நோய் மறைத்து நடக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளது.; இதனால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இது மாற வேண்டும்.

பெண்களும் தங்கள் புகுந்த வீட்டில் நடப்பதை மறைந்து விடுகிறார்கள். குhரணம் கடன்வாங்கி  கஷ்டப்பட்டு பெற்றோர் செய்து வைத்த திருமணம் மகள் நல்லமுறையில் வாழ்கிறாள் என சந்தோசப்படட்டும் அதை கெடுக்கக் கூடாது என நினைத்து மறைத்து விடுகிறார்கள்.
    அதன் விளைவாய் நிகழும் துயரங்களில் ஒன்றுதான் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததும்  இது தொடரக்கூடாது.
    குடிப்பதையே அடிப்படை உரிமையாய் புரிந்து கொண்டுள்ளவர்க்ள அதிகரித்து போதைச் சமூகமாய் மாறிவரும் சூழலில் தனது பெண்ணை கொடுப்பது என முடிவெடுக்குமுன் தீர்க்கமாக விசாரியுங்கள்.
மருத்துவச் சான்றிதழ் திருமண உறுதிக்கு முன் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.
      இடைத்தரகர்கள் கட்டமைக்கும் பெருமை புதைகுழியில் சிக்காமல் நண்பர்கள் உறவுகள் மூலம் விசாரித்து உறுதி செய்திடல் வேண்டும்.
பெண்களும் சமூகமும் வரதட்சனை கேட்க்கும் மாப்பிள்ளையை போதை அடிமைகளை இழிவு செய்து புறக்கணிப்பதுடன் தங்களை வரதட்சணை மூலம் மதிப்பிள்ளா பண்டமாய் மாற்றுவோரை ஒதுக்கித் தள்ள  வேண்டும் .
     புகுந்த வீட்டில் உறவுகள் பிரச்சனைகள் குறித்து பெற்றோரிடம்  பெண்கள் பேசவேண்டும்.  தனக்கு எதிரான தவறான எதையும் பொருத்துக் கொள்ளும் பேதமை ஒழிய வேண்டும்.
    அப்போதுதான் தறுதலையை பெற்றிருந்தாலும் தாலியறுக்க பெண் தேடும் இரக்கமற்ற நாய்களை அழிக்க முடியும்.

Thursday, February 2, 2012

தேசியத்தை காவுகேட்க்கும் முல்லைபெரியாறு அணை

  'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
         மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் '
என்றான் பாரதி அந்த வழியில் வங்காளம் எனும் அண்டை நாட்டுடன் ஆன நதிநீர்ப் பிரச்சனை மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு வங்க அதிபரோடு பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டது. ஆனால் உள்நாட்டிலேயே  அருகாமை மாநிலத்துடனான முல்லை பெரியாறு பிரச்சனை கன்னித்தீவுக் கதையாய் நீள்கிறது. பெற்றோர்,பிறப்பு,வளர்ப்பு , தரம், தகுதி – பயன்பாடு பலம் என. மூளை நிரம்பி எங்கே காது வழியே வழிந்து விடுமோ என அஞ்சும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணை குறித்த செய்திகள. ;(அதையே நானும் சொல்லி நானும் போரடிக்க விரும்பவில்லை)
    தமிழக அரசியல் தலைவர்கள,; தமிழ் ஊடகங்கள் அள்ளித் திணித்துள்ள  முல்லைப்பெரியாரின் வரலாறு-புள்ளி விபரங்களால் தமிழர்களின் மூளைகள் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறது.
    கேரள வெகு மக்களுக்கும் இதே நிலை ஏற்படாமலிருக்க வாய்ப்பேதும் இல்லை. இது அங்கு நடைபெறும் போராட்டங்களின் ஊடாக அறிய முடிகிறது.
    உடமை, உரிமை என உணர்ச்சியைத் தூண்டி இரண்டு மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களாக மாற்றியதில் மாட்சிமை பொருந்திய அரசியல்வாதிகளின் பங்கு மகத்தானது.
    பெரியாறுத்தண்ணீரை நம்பியுள்ள தமிழக பாசனப்பகுதி குறித்து கேரளத்திலோ,  அணை உடைந்தால் 4 மாவட்டங்கள் அழிந்து போகும் என உருவாக்கப்பட்ட உயிர் பயம் குறித்து தமிழகத்திலோ விவாதிக்கப்படவில்லை.
    கவனமாய் கைவிடப்பட்ட  இந்த தந்திரத்தால் இரு மாநில எல்லைகளும் போர்களமானது.     கட்டுச்சோறு  கட்டிச்சென்று கம்பம் நகரில் போராடுவதே தமிழ் உணர்வின் வெளிப்பாடாய் கணிக்கப்பட்டது.      
         'கங்கை நதிபுரத்து கோதுமைப்பண்டம்
        காவிரி  வெற்றிலைக்கு மாருகொள்வோம்
        சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு
        சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'
என்ற பாட்டன் பாரதியின் பண்டமாற்று உறவுக் கவியை கரைத்துக் குடித்தவர்களே மாற்றுச்சந்தை ஏற்பாடில்லாமல்  தமிழக காய்கறிகளை கேரளாவுககு அனுப்பாதே என்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிப்பார்களே என தமிழகத்திலோ தமிழக காய்கறி வரத்தில்லையெனில் அந்த பற்றாக்குறையை ஈடுசெய்யவும் அதனால் ஏற்படும் விலை உயர்வும் மக்களை பாதிக்குமே என கேரளத்திலோ எந்த அரசியல்வாதிகளும்  கவலைப்படவில்லை. காரணம் ஊடக வெளிச்சம் தன்னை விட்டு விலகுவதை அவர்கள் விரும்பவில்லை.
    கொட்டடிக்கும்போது மட்டும் குதித்து சாமியாடும் கோயில் பூசாரியாய் கேரள அரசியல் வாதிகள் கொட்டடித்ததும் தமிழக அரசியல்வாதிகள் குதியாட்டம் போடுவார்கள் . இந்த திருவிழா காட்சி வருடம் தோறும் வந்து போகிறது.
    முல்லைப்பெரியாறு மட்டும் பிரச்சனையாகிவிட்டது. அதிலும் மெகா தொடர் பிரச்சனையாகிவிட்டது.
    முல்லைப்பெரியாறு பிரச்சனை முடிவுக்கு வராததற்கு என்ன காரணம் ? அரசியல் என அறிவோமாக....
    சில  தினசரிகளில் வந்தது போல, அல்லது உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் சொன்னது போல தற்போது நடைபெற உள்ள பிரபவம் தொகுதி தேர்தலுக்காக என்பதில் முழு உண்மையில்லை. கேரளத்தின் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முல்லைப்பெரியாறு அணையை பிடித்துக்கொண்டு அரசியல் செய்வது நீண்டகால வரலாறு.
    சுதந்திர இந்தியாவில் 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் விடுதலை பெற்றுத் தந்த வீரர்களாய் , தியாகிகளாய் தங்களை முன்னிருத்தி தேர்தலை சந்தித்து அனைத்து மாநிலங்களிலும் நிகரற்ற வெற்றியைப் பெற்ற காங்கிரஸ,; 5 ஆண்டுகால ஆட்சியிலேயே தங்களின்  அடையாளங்களை வெளிப்படுத்தி அன்னியப்பட்டுப்போனார்கள்.
    மாநிலங்களில் மாற்று அரசுகள் முளைத்தன.  அதில் உலகத்தின் அதிசயமாய் கேரளத்தில் 1957-ல் மக்கள் வாக்களித்து ஒரு மாநில ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தார்கள். இந்தியாவே தங்களின் பரம்பரை சொத்தாய் இறுமாந்திருந்த காங்கிரஸ் கட்சியும் அதன் எஜமானர்களும் பதறிப்போனார்கள்.
    அதிகாரம் பறிபோகும் மாற்றத்திற்கான முதல் துவக்கமாய் இது மாறிவிடக்கூடாதே என்ற அச்சத்தால் , காரணம் இல்லாத காரணத்தினால் 356-ஐ பயன்படுத்தி 1959-ல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை  எழுந்து நடக்கத் துவங்குமுன் இடுப்பை முறித்துப் போட்டார்கள். அன்றிலிருந்து 1979-வரை கேரள அரசியல் நிலையற்றதாய் மாறிப்போனது கேரள மக்களின் கனவுகளுக்கு கல்லறை கட்டிவிட்டு தங்களது  அரியாசனக் கனவுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
    இவர்களின் சாகச அரசியலில் சந்தி சிரித்தது,  பதவியை பறித்துக்கொள்ள எதையும் பற்றிக்கொள்ளும் பாதை நோக்கி பயணித்தது காங்கிரஸ் அதில் ஒன்றுதான் முல்லைபப்n;பரியாறு அணைப்பிரச்சனை  .
    1970-க்கு பிந்தைய காலங்களில் பெரியாறு அணைக்கட்டில் கசிவதற்கான அளவினை விட அதிகமான நீர் கசிகிறது என்கிற செய்தி வெளிவர காங்கிரஸ்  அதைக் கைப்பற்றி கற்பனை சேர்த்து கயிறு திரிக்கத் துவங்கியது . அன்று துவங்கி  அச்சம் விதைத்து ஆட்சியை அறுவடை செய்து கொள்ள நினைக்கும் ஆபத்தான அரசியல் விளையாட்டில் அனைவரம் ஆர்வம்  காட்டத் துவங்கினார்கள் இதில் கேரளத்திலுள்ள எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
    இயற்கையின் கொடையான நதிநீர், உயிரினம் அனைத்திற்கும் உரிமையானது என்பதை தேசியம்  பேசும் மதிமிகு தலைவர்களுக்கு யார் புரிய வைப்பது . அணையின் பாதிப்பு குறித்து எந்தப்பொறியாளர்களும் பேசாததை இவர்கள் பேசுவதிலிருந்தே பதவி ஆசை பகுத்தறியாது என்பது பளிச்சிடுகிறது.
        இதில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்கள், ஒன்று நமது உயிர்காக்க உறுதியாய் போராடுகிறார்கள் எனும் நம்பிக்கையைப் பெறுவது. இரண்டு பெரியாறு அணையையே  கேரளத்திற்கேயானதாய் மாற்றிக்கொள்வது . இதன்மூலம் கேரளத் தலைவர்கள் பதவிக்காக மாநில நலனைக் காப்பதற்கே இப்பிறவி எடுத்ததாய்க் காட்டிக் கொள்ள பட்டாம்பூச்சியை பருந்தாகக் காட்டி கேரள மக்களை நம்பிட வைக்கப் போராடுகிறார்கள்.
    தமிழகத் தலைவர்களோ ஆதிகாலம் தொட்டு  தமிழகம் பறிகொடுத்தவற்றின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் விடுதலைக்குப் பிறகு 1956 - மொழிவழி மகாணங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற குரல்கள் உரத்துக் கிளம்பிட பிரிக்கப்பட்ட மாநிலங்களில்  தமிழகம் அதிகமான  பகுதிகளை இழந்தது என்று ஏராளமான விபரங்களை கலைஞர் மாதரியான மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பல தலைவர்களும் ஊடகங்களும் பேசி, எழுதி வருகிறார்கள்.
    அதன்பிறகு 74-ல் கச்சத்தீவில் தமிழகத்தின் உரிமை எனத் தொடர்ந்து வராது வந்த மாமனியான சேதுகால்வாய்த் திட்டம் என பட்டியல் நீள்கிறது.
        அன்றைய நிலையி;ல் தேசிய உணர்வுகள் மேலோங்கியிருந்த நமது முன்காலத் தலைவர்கள் தனது சசோதரர்களுடன் பங்கிட்டுக் கொள்வதாய் நினைத்து பெருந்தன்மையாய் நடந்த  எல்லைப் பங்கீட்டை ஏற்றிருக்கலாம் அந்த பண்பினை நாட்டில் தொடர்ந்து வளர்த்தெடுக்க இதுவரை மத்திய ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் முயற்ச்சி எடுக்காததுடன் தனது சந்தர்ப்பவாத அரசியலால் தேசிய உணர்வுகளை சிதைத்து குறுகிய பிரதேச உணர்வுகள் முளைத்து  வளர்ந்திட உதவினார்கள்.
    பல்வேறு தேசிய இனங்களின்  ஒன்றியமாக வடிவம் கொண்டுள்ள இந்தியாவின்  அனைத்து தேசிய இனங்களையும்  அரவணைத்து தேசத்தின் வளங்களில், வாய்ப்பில், வசதிகளில்,  வளர்ச்சியில் சம பங்கினை சகல இனத்திற்கும்  பிரதேசங்களுக்கும் தர மறுத்ததால் பிரதேச பிரச்சனைகள் முன்னுக்கு வந்தது. அதைப்பிடித்துக்கொண்டு  அமைப்புகள்  உருக்கொண்டு  பிரதேச உணர்வுகளை கிளறி வெறியாக்கி மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி அதிகாரம் பெற்றது.
    இந்தியாவில் 107கோடி மக்களையும் ஒரு உருவமாய், ஒரு குரலாய,; ஒரே உறவாய் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை இனம் மொழி கலாச்சாரம்  வௌ;வேறெனிலும்  உணர்வில் ஒன்றி வாழும் தேசமாய் மாற்றும் மாற்றம் நோக்கி பயணிக்கவேண்டிய தருணம் இது. விட்டதை பிடிக்க வேண்டும் என 1940 காலத்தை நோக்கி திரும்பிட சிலர் ஆர்வம் காட்டுவது ஆபத்தான அரசியல்.  
    இன்று தமிழகம சந்திக்கும் நதிநீர்  பிரச்சனைகள்  குறுகிய பிரதேச  அரசியல் உணர்வு கலந்தது. இதை அரசியல்வாதிகளே  செய்கிறார்கள். மக்கள் தங்கள் வாழ்வாதாரம் சார்ந்தும் உயிர்பயம்  காரணமாகவும் அவர்களுக்கு ஒத்துக்போகிறார்கள். பகை உணர்வு கொண்டல்ல .  நமது எதிர்நிலை அவர்களை அந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடக்கூடாது.
    முல்லைபெரியாறு அணையால் 5 மாவட்டங்கள் தமிழகத்தில் பாசன வசதி பெறுகிறது என எல்லோரும் பேசியும் , எழுதியும் வருகிறார்கள். அதில் உண்மையில்லை. இராமநாதபுரத்திற்கு கடைமடைப்பகுதி எனும் அடிப்படையில் மூல வைகையிலிருந்து கிடைக்க உரிமையுள்ள 7 பங்கு தண்ணீர் என்பதே கிடைக்காத நிலையுள்ளது. அதற்கே அண்டை மாவட்டங்களோடு முட்டிமோதும் நிலை இம்மாவட்ட விவசாயிகளுக்கு உள்ளது.  இதில் முல்லைப்பெரியாறு தண்ணீர் எப்படி கிடைக்கும். எண்ணிக்கைக்காக முகவை மாவட்டமும் இடம் பெற்று விட்டது. மாநிலத்திற்குள்ளேயே உரிய பங்கைப் பெற போராடி வரும் நிலை பக்கத்து மாவட்டம் , பக்கத்து தாலுகா என்ற அளவிலேயே உள்ளதை மறந்து விடமுடியாது. இது உணர்வு கலந்த வாழ்க்கைப் பிரச்சனை.
    கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுடன் நமக்கிருக்கும் நதிநீர் பிரச்சனைகளை தேசிய உணர்வை மேம்படுத்தி அரசியல் ரீதியாகத் தீர்த்துக்கொள்ள வேண்டுமே  தவிர தேகபலம் காட்டுவது பிரச்சனையை தீவிரமாக்கும்.
    குறுகிய மனதும் சுயநல அரசியலே குறிக்கோலாய் உள்ள இன்றைய அரசியல் சூழலில் நதிநீர் பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வும் தேவைப்படுகிறது. நமது முன்னால் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் முன்வைத்த யோசனையை கவனத்தில் கொள்ளலாம்.
    இன்றிருக்கிற நதிநீர் ஆணையத்தின் பணி என்ன என்பதே தெரியாத சூழலில் தேர்தல் கமிசனைப்போல சுய அதிகாரமுள்ள  தேசிய நதிநீர் கமிஷனை அமைக்கலாம். மாநிலங்களுக்கு உள்ளே உள்ள கண்மாய் , ஊரணி , ஏரி போன்ற நீர்நிலைகளை மாநில அரசு கவனித்து வந்தால் போதும். ஆனால்  நதிகளை நிர்வகிக்க இந்த கமிஷன்  பொறுப்பாக்கப்பட வேண்டும்.  அதனிடம் தேசிய நதிகளை ஒப்படைத்து, மாநில பாசனத் தேவைகளை கணக்கிட்டு, நீர் பங்கீடு செய்வதை அதனிடம் ஒப்படைக்கலாம் . நதி பராமரிப்பு , நதிநீர் பாதைப் பராமரிப்பு, அணை பராமரிப்பு போன்றவற்றை அந்த கமஷனிடமே ஒப்படைக்கலாம். அணைகளின் பாதுகாப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம்.  இதுவே இன்றைய  இந்திய நதிநீர் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவர உதவும்.
       இன்று  இந்தியாவில் உள்ள சுமார் 23.80கோடி குடும்பங்களில் இன்றும் 72.26சத குடும்பங்கள்  கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் வேளாண் தொழிலோடுதான்  பின்னிக்கிடக்கிறது. சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் லாபமற்ற தொழிலாகிவிட்டதால் விவசாய நிலங்கள் வேறுபயன்பாட்டுக்கு மாறி வருகிறது. தமிழகத்தில் பயிரிடப்பட்ட சாகுபடி நிலத்தின்  அளவு 1970-ல் 185 லட்சம் ஏக்கர் 91-ல் 156 லட்சம் ஏக்கர் 2001-ல் 131 லட்சம் ஏக்கர் 2010-ல் 128 லட்சம் ஏக்கர் என குறைந்து வருகிறது. அந்த நிலங்கள் ரியல் எஸ்டேட்  வணிகத்தால் வளைக்கப்பட்டு விட்டது. இது தேசம் முழுமைக்குமான நிலையாகும். இது ஆழமான உணவு நெருக்கடி நோக்கி போவதை உணர வேண்டும். எனவே நீராதாரங்களை சந்தைப் பொருளாக்கிவிடாமல் நீர் ஆதாரங்களை பாதுகாக்க மேம்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.

    மேலும் இந்தியாவின் மலைப்பகுதிகளில் ஏராளமான நதிகள் உருவாகி 1500 டி.எம்.சிவரை நீர் பயனின்றி  கடலில் கலந்து விடுகிறது என்ற கணக்கு நீர்வள ஆய்வாளர்களால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.  ஏழுவழிச்சாலை , நாலடுக்கு மேம்பாலம்  என நமது அரசு ஆண்டுவருவாயான சுமார் 12-இலட்சம் கோடி ரூபாயில் கணிசமான ரூபாயை செலவிடுகிறது. ஆனால் 75 சதம் மக்கள் நம்பி வாழ்ந்து வரும் வேளாண்மை தொழிலை பாதுகாக்க வீணாய் கடலில் கலக்கும் நதிகளை தடுத்து அல்லது திருப்பி நீரை சேமித்தால் வேளாண் தொழிலையும் அதை நம்பியுள்ள மக்களையும் பாதுகாக்க முடியும் என தொடர்ந்து ஆய்வாளர்கள் வழியுறுத்திவருகிறார்கள்.  இதை மத்திய மாநில ஆட்சியாளர்களும் கவனத்தின் கொள்வது அவசியம் . அப்படி செய்தால் இந்திய மக்களிடையே பகைமை உணர்வு வேர்விடும் வாய்ப்பை தடுத்திட முடியும்.  இந்த திசையில் நமது அரசுகளும் , அரசியளாளர்களும் சிந்திக்க வேண்டும். நமது ஆசை நிறைவேறுமா...?


                        மங்களக்குடி நா.கலையரசன்