Wednesday, January 25, 2012

நிவாரணம் வந்தது......நீதி..?

                                    
                                        
  
         இந்தியச் சமூகத்தின் மூலைக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள சாதிவெறி தன்னை ஒழிப்பதாய் பிரகடனம்  செய்து,  புறப்பட்டு , போராடி  செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்களையெல்லாம் விழுங்கிவிட்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டதுடன் அதிகார ஆதரவுடன் அரசுத்துறைகளுக்குள்ளும் அழுத்தமாய் ஊடுருவி நீக்கமர நிறைந்திருப்பதை அவ்வப்போது  பகிரங்கமாய் வெளிப்படுத்தியும் வருகிறது.
      கொடியங்குளடம், நாலுமூலைக்கிணறு, வாச்சாத்தி,தாமிரபரணி-என அதிகார வேடத்தில்  சாதி வெறி நடத்திய மலைவாழ் மக்கள், தலித்துகள் மீதான படுகொலைப் பட்டியலில் பரமக்குடியும் இணைந்து 5 மாதங்கள் கடந்து போயுள்ளது.
       என்றாலும் காவல் துறையினரின் வெறியாட்டத்தில் உறவை இழந்த குடும்பங்களில் இழப்பின் வெறுமையிலும் உடல் உறுப்புகள் உருக்குலைக்கப்பட்டவர்கள் தங்களின் காயங்களின் வேதனை  வெளிப்படும்போதும் அந்த  செப்டம்பர்-11 –ன் கொலைவெறிக் காட்சிகள் நிழலாடி ரண வேதனையை  அன்றாடம்  அனுபவித்தபடி உள்ளனர்  மாவட்ட மக்கள் மத்தியிலும் நீங்காத காயத்தை நிரந்தரமாக்கிவிட்டது.
        பொதுமக்களை அச்சுறுத்தி ரௌடியாக நினைப்பவன் ஊர் மந்தையில் வைத்து அப்பாவி ஒருவனை அடித்து துவைப்பது மாதரி தமிழக ஆட்சிக்கு எவர் வந்தாலும் தனக்கு எதிராய் நடக்கும் போராட்டங்கள் அதை வெளியிடும் ஊடகங்களை திசை திருப்பிடவும் ஆட்சி குறித்த அச்சத்தை விதைக்கவும் உழைத்து பிழைக்கிற அப்பாவி தலித் மக்களையும் மலைவாழ் மக்களையும் குறிவைத்து தாக்குவதை வழக்கமாய் கொண்டுள்ளனர். இதுவரை நடந்த தாக்குதல்களை அவதானித்தாலே அது புரியும்.
        இதன் தொடர்ச்சியாக நடந்த  பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 தலித்துகள் கொல்லப்பட்டதும் உடனடியாய் களத்திற்கு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னனி காவல்துறையின் இந்த காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டை கடுமையாக கண்டித்தது உறவுகளை பறிகொடுத்த குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொண்டதுடன் நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியது.
        எந்த இழப்பீடுகளும் உயிர் இழப்பை ஈடுசெய்யமுடியாது என்றாலும் பாதிக்கப்பட்ட உறவுக்கு இது ஒரு உதவியாய் அரசுக்கு இது அவதாரமாய் இருக்கட்டுமே என முடிவுசெய்து காவல்துறையால்  படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்  மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்தவர்களுக்கு  நிவாரணம்  இப்படிஒரு படுகொலை நடக்க யார் காரணம் எனக்கண்டறிய சி.பி.ஐ விசாரணை , துப்பாக்கிக்சூட்டை நடத்தியவர்களை பணி இடைநீக்கம்  செய்வது என்ற கோரிக்கைகளை முன் வைத்து காவல்துறையின் கடும் நெருக்கடி –மிரட்டல்களை மீறி அக்டோபர் 2-ம்தேதி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
        தொடர்ந்து நாம் தீண்டாமை ஒழிப்பு முன்னனியாகவும் சமூக அமைப்புகளுடன் இணைந்தும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டோம்  பரமக்குடி துப்பாக்கிச்சூடு  எதிர்ப்பு நடவடிக்கைக்குழுவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வளர்கள்  நீதிபதிகளை கொண்ட  பொது நீதி விசாரணையை நடத்தினோம் .  அ.தி.முக அரசு அசையவே இல்லை.
        முதல்வராய்  ஜெயலலிதா பொருப்பேற்ற பிறகு நீதி மன்றங்களின் குரல்கள் மூலமே நியாயம் பெறமுடிகிறது என்கிற தற்கால உண்மை உணர்ந்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்  பெயரில் வழக்குத் தொடர்ந்தது, மனித உரிமை மீரல்கள் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் சட்டரீதியாய்  போராடி வரும் தமிழக மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி  வாதாடினார் அதன் நியாயம் உணர்ந்தது நீதிமன்றம்.
        இழப்பீடு குறித்தும் சி.பி.ஐ-விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5-லட்சம்  இழப்பீடு  வழங்கப்பட்டது. தற்போது அரசுப் பணிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
        வீரம்பல் திரு.பன்னீர்அவர்களின் மகள் ரெபேக்காள்  இளநிலை உதவியாளராகவும் ,  கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனியின் அண்ணன் திருநாவுக்கரசு தலையாரியாகவும,; காக்கனேந்தல் வெள்ளைச்சாமி அவர்களின் மகன் சக்திவேல் டாஸ்மார்க்கிலும் ,  மஞ்சூர்  ஜெயபால் மனைவி காயத்திரி அலுவலக உதவியாளராகவும் , பல்லவராயனேந்தல்  கணேசன் அவர்களின்  மகன் குணசேகரன்  அலுவலக உதவியாளராகவும் அரசு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.
        பணி  ஆணை  வழங்கப்பட்டதும் இது தீண்டாமை ஒழிப்பு முன்னனியும் சமுதாய அமைப்புகளும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டதென பகிர்ந்துகொள்வதற்காக நாம் அனைவருடனும் தொடர்பு கொண்டு பேசினோம்.  நமது வாழ்த்துக்களை  பகிர்ந்து  உரையாடி முடிக்கும்  போது  அதில் பலர் அழுத்தமாய் முன் வைத்தது
    'கிடைச்சது வெறும் நிவாரணம் தானேண்ணா...
    நியாயம் கிடைக்கலையே..?' என்பது தான்
இது வெறும் வார்த்தையாக எமக்கு படவில்லை.  மனதின் ஆழத்தில் அழுந்தி கிடக்கும் துயரத்தின் வலியாகவே  உணரமுடிந்தது.  இந்த கொடுமையான படுகொலைகளைச் செய்த காவல்துறையினர்  எவரும் இதுவரை ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதும் துப்பாக்ச்சூடு  நடத்திட  உத்தரவிட்ட சூத்திரதாரி யார் என்பதும் மர்மமாகவே தொடர்கிறது. உயர்நீதிமன்றத்தின்  உத்தரவால் உருப்பெற்றுள்ள  சி.பி.ஐ விசாரணை இந்த மர்மங்களை மறைத்திருக்கும்  அதிகாரத் திரை விலக்கி அம்பலப்படுத்தும்  என்பதுடன் அந்தக் கொலைகாரர்களுக்கும்  தண்டனை கிடைக்கவும்பயன்படும் என்று நம்புவோம்.  அதுவரை நாம் உயிர்ப்புடன் இணைந்து செயலாற்றுவோம்.  அது தான் பரமக்குடி போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடைபெறாது முற்றுப்புள்ளி வைக்கும்.

                        மங்களக்குடி நா.கலையரசன்



Monday, January 16, 2012

மாட்டுக்கறி இழிவானதெனும் கற்பிதம்

தமிழகத்தின் அரசியல் பொது வெளியில் இட நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருந்த – நக்கீரன் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான  பிரச்சனை 'வருந்துகிறோம்' எனும் ஒரு வரியால் முற்றுப் பெற்றது.
    முன்பொறுமுறை  நக்கீரன் வாரஇதழ் சந்தித்த நெருக்கடியில்  ஆயிரம்  கரங்கள் ஆதரவாய் நீண்டது.  ஜெயலலிதாவும் கடும் கண்டங்களை சந்தித்தார். இப்போது அந்தச் சூழல் இல்லை. காரணம் விவாதிக்கப்பட்ட பிரச்சனையில் இருவருமே ஒரே கருத்தியலில் காலூன்றி நின்றதுதான்.
    சமீபகாலமாய் வாசிக்கும்போதே தி.மு.க-வின் சார்பில் வெளியிடப்படும் கையோடாகவே  கருதத்தூண்டும் வகையில் மாறிப்போன நக்கீரன் சினிமா நடிகைகளின் அந்தரங்கங்களை துப்பறியும் அத்தியாவசியப் பணிகளுக்கிடையில் முதல்வர் ஜெயலலிதா  விருப்பமாய் உண்ணும் உணவு எது எனும் விபரத்தை புலனாய்வு செய்து வெளியிட்டதும் , தமிழக முதல்வரும் தமிழக பிரச்சனைகளான விலை உயர்வு, முல்லைப்பெரியாறு, கொலை-கொள்ளைகளை ஒதுக்கி வைத்து விட்டு மிக முக்கிய ஜீவாதாரப் பிரச்சனையாக இதை கையில் எடுத்துக்கொண்டு அவரும்,  அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் , தலைவர்கள்; நடத்திய ஆவேசப் போராட்டங்களும் அறிவார்ந்த பொது மக்களை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது (என்ன கொடுமை சார் இது...)
    'கருத்து முதல்வாதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை லோகாதவாதிகளாய் நின்றே சந்திக்கிறார்கள். அதே போல பொருள் முதன்மை தத்துவம்  பயின்றோர் அதன் பிரதி நிதி என்போர் பல பிரச்சனைகளை கருத்து முதன்மை நிலை நின்றே கையாள்கிறார்கள் என்பார் ஜார்ஜ் பொலிட்சர்' . இதையே எளிய முறையில் அறிவியல்  பேராசிரியர்கள் விஞ்ஞானிகள், மேதைகள் என புகழப்படுவோர்  பலர் நடைமுறையில் காலங்காலமாய் கை மாற்றி வந்துள்ள பத்தாம்பசலித்தனமான கருத்துக்கள் மூட நம்பிக்கைகளை ஒரு விவரமற்ற பாமரனாகவே கடைபிடித்து வாழ்கிறார்கள். அப்படியானவர்களை படித்தவர்கள் அறிவைஅறிந்தவர்கள் என எப்படிச் சொல்வது அப்படியானவர்கள் படித்ததெல்லாம் தேர்வுகளில் மதிப்பெண் பெறவே .. என்பார் செம்மலர் இலக்கிய இதழின்  ஆசிரியர்  எங்கள் தோழர்.எஸ்.ஏ.பெருமாள் அவர்கள். இவை எத்தனை உண்மை என்பதை தற்போது பரபரப்பாக இவர்கள் நடத்திய 'மாட்டுக்கறி'  குறித்த வாத பிரதிவாதங்கள்  உணர்த்துகிறது.
        பரபரப்பு செய்தி வெளியிடுவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட நக்கீகரன் வார இதழே பரபரப்புச் செய்தியானது வினோதம்.
       
பிரச்சரனயின்  மையமான இருவரில் ஒரு சாரார் பத்திரிக்கையாளர். இன்னொருவர் மிகப்பெரிய படிப்பாளி அவருக்குதெறியாத விபரமே இல்லை என அவரது கட்சியினர் மற்றும் சில அரசியல் தலைவர்களால் பாராட்டப்படுபவர். இவர்கள் இருவருமே தமிழ்  அறிவு சார் மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களாய் சொல்லப்படுபவர்கள். ஆனால் அவர்கள் இப்பிரச்சனைகளை கையாண்ட விதத்தினை நோக்கினால் எனக்கு அப்படி எண்ணத் துணிவில்லை.
    எங்கள் கிராமத்தில் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் இரண்டு பெண்கள் சண்டைபோட நேர்ந்தால் எதிர் பெண்ணை இழிவு செய்வதற்காக போடி...பறப்பயலோட போனவளே..என வசை பொழிவதை காணமுடியும். இதன்மூலம் அந்தப்பெண் நினைப்பது என்ன' ஒரு கீழ்சாதிப்பயலோட சேர்த்து கேவலப்படுத்தீட்டம்ல.... என்பதுதான்.  இன்னொருத்தியோ  குறவனோடு போனவள் என சான்றிதழ் தந்து வசையாடுவாள் . இந்த வாதப்பிரதி வாதத்தில் எங்கேனும் மேதமை தென்படுகிறதா?  இந்தியச் சாதிச் சமூகம் இவர்களின் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருக்கிற சாதிச் சாக்கடை நாத்தம்  வாய் வழியே  வெளியேறுகிறது என்பதைத் தவிர  இதே மாதிரியின் அடுத்த பகுதியாய்த்தான் நக்கீரனின் புலனாய்வும் ஜெயலலிதாவின் எதிர்வினையும்.  இவர்களின் செயல்பாட்டில் துளிகூட  கற்ற அறிவு வெளிப்படவில்லை.
        ஏதோ ஒரு கூட்டத்தில் மறைந்த எம்.ஜி.ஆர்  அவர்கள் ஜெயலலிதா மாட்டுக்கறியை விரும்பி சமைத்து சாப்பிடுவார் எனச் சொன்னாராம். அட்டைப்படக் கட்டுரையாய் வெளியிடும் அளவுக்கு இதில் அதிர்ச்சியான வினோதமான செய்தி என்ன உள்ளது ? நமக்குப் புரியவில்லை. ஆனால் ஜெயலலிதாவை இழிவுசெய்யும் நோக்கம் நிச்சம் உள்ளது.
    உலகம் முழுவதும் இந்தியாவிலும் மாட்டுக்கறியை விருப்பமான உணவாக ஏற்பவர் அதிகரித்து வரும் நிலையில் அதை வைத்து ஒருவரை இழிவு செய்யு முற்பட்டது ஏன். மாட்டுக்கறி என்பது(மிலேச்சர்கள் உணவாம் )தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்களின் உணவு என மநுவின்  அடிமைகளால் கட்டி வைக்கப்பட்டுள்ள வஞ்சகக் கருத்தியல்  நக்கீரனையும்  பற்றிக் கொண்டுள்ளது தெரிகிறது. 
        இந்த போக்கால்தான் அறிவுத்துறையினர் விலகி  நின்றார்கள். ஊடகங்கள் விமர்சித்து எழுதின. நீதிமன்றத்தில்  நக்கீரன் வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. மெத்தப்படித்த இந்த மேதாவிகளின் இந்த கருத்து அகநிலை உணர்வெனில் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே '  என நக்கீரனுக்கும் சொல்ல வேண்டியது நம் கடமை. 
        நக்கீரனில் வெளியான இந்த கருத்தை முதல்வர் எதிர்த்து சாமியாட்டம் போடாமல் இருந்திருந்தால் வேறுவகையான கண்டனங்களை நக்கீரன் சந்தித்திருக்கும்.  நிதானமே நெருங்கமுடியாத நெருப்பல்லவா அவர் . அவர் நிதானமாய் இருப்பார் என எதிர்பார்ப்பது நம்மை சிறுபிள்ளையாக்கும்.
        இயல்பான குணத்துடன் கர்ச்சித்து எழுந்தார். கட்சியினர் , எம்.எல்.ஏக்கள் முன்னனித் தலைவர்களின் முக்கியப்பணியாய்  அலுவலகத்தாக்குதல் , ஆபாச அர்ச்சனை என போர்க்களமானது தமிழகம்.
        ஏன் இந்த ஆர்ப்பாட்டம் அம்மாவின் கருணைப்பார்வைக்கும் , பதவி அறுவடைக்கும் முக்கிய தலைவர்களெல்லாம் முன்வரிசையில்  நின்றார்கள்.  அவர்கள் அப்படி பொதுவெளியின் அமைதி கெடுத்ததை ஜெயலலிதா  கண்டிக்காதது மட்டுமல்ல அவரும் ஆவேச உச்சம் தொட்டார்.  எதனால் இத்தனையும். பிறப்பால் பிராமணரான தன்னை மிலேச்சர்களின் உணவை உண்டதாய் சொல்வது தனது உயர்சாதிக் கிரீடத்திற்கு உலைவைக்கும்  என பதறிப்போனார். சொந்த சாதி சாபமிட்டு விடக்கூடாதே எனத்துடித்து நான் மாட்டுக்கறி சாப்பிடமாட்டேன் என சத்தியம் சுமக்கும் அறிக்கை வெளியிட்டார். இத்தனையும் எதற்கு..? சகல விபரமும் தெறிந்த படிப்பாளிக்கு உணவில் இழிவானதொன்றும் இல்லையெனத் தெரியாமல் போனது துரதிஷ்டம்.
        தன்னைப்பற்றி ஒரு தவறான செய்தி வெளிவந்தால் உண்மையெனில் தைரியமாய் ஏற்பதும், இல்லையெனில் அழுத்தமாய் மறுப்பதும் கற்றறிந்தவரின் பண்பான நடவடிக்கை. 'மிகுதியான் மிக்கவை செய்தாரை –தாம்தம் தகுதியான் வென்றுவிடல்' என்பான் வள்ளுவன். அவை மீறப்பட்டதற்கு காரணம் மாட்டுக்கறி என்பதுதான். அந்த செய்தியே மான்கறி  என வந்திருந்தால் இத்தனை பதட்டம் இருக்காது. உலகத்தில் 90 சதவீதம் பேர் உண்ணும் உணவை இவர்கள் இருவரும் இழிவானதாய் முன்வைத்து வாதிடுவதில்  அதை உண்பவரையும் சேர்த்து இழிவு செய்வதை மறந்து விடுகிறார்கள். அல்லது ஆமா..அப்படித்தான் செய்வோம்  உங்களால் என்ன செய்யமுடியும்  என சவால் விடுகிறார்கள்.  பிறர் உண்ணும் உணவை இழிவு எனச் சொல்ல எவருக்கும் உரிமையில்லை. இனி ஒரு முறை இப்படி ஒரு திமிர்த்தன விவாதத்தை சமூக பொது வெளியில் எவர் துவங்கினாலும் மாட்டுக்கறியை உணவாய் கொள்வோர்  அந்த திமிர் உடைப்பார்கள் எனும் அச்சத்தை உருவாக்க வேண்டும்.  
        மேற்கண்டவை எதிலிருந்து  புறப்படுகிறது என்றால் மாட்டுக்கறி உண்போர் இழிவானோர்  எனும் மடத்தனமான கருத்தியல் தான் .  ம்.... இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த கேடு கெட்ட மநுவின் பிணத்தை சுமந்து திரியப்போகிறதோ இந்த சமூகம்...
       


Tuesday, January 10, 2012

தலைமுறைப் பகை

 எதனை இழந்தாய்
இத்தனை கோபம்
அடிவயிற்றில்  அக்கினி
தொட்டதுபோல்
இத்தனை ரௌத்திரம்

ஒழுக்கமும்
பண்பாடும் பிரள
வாழ்வதாய் பகிரக்கேட்டு
பதறிப்போகாத நீ ......

பத்மநாப கோவிலின்
சுரங்கமாய்  கார்டன்
காட்சிப் படுத்தப்பட்டபோது
கலங்கிடாத நீ.....


ஊரைச் சுருட்டியதாய்
துரத்திய சம்மனுக்கு
ஊருக்கு ஊர் போய்
உள்ளேனய்யா... என்றெதென்னி
வருந்தியறியா நீ...

மாமிசம் உண்டாய்
எனும் செய்தி
மானப்பிரச்சனையாய்
மாறியது வியப்பு

மாமிசம் தொடா
மானிடப் பிறவியா நீ...
மாறிவந்த காலம்
அறியா மனுசியா நீ...

மாமிசம் புசிப்பதற்கே
யாக குண்டம் கண்ட
அசைவ அக்கிரகாரத்தை
அறியாத பேத்தியா நீ....

நீ உண்ட தாய் பாலில்
கான்வெண்ட கல்வியில்
கனவுகூட  காட்டாத
நிகழ் அதிகார வாழ்க்கையில்
எங்கள் ரத்தமும் வியர்வையும்

பிறப்பை-...நிறத்தை....
இருப்பை....உழைப்பை ...
பிரித்திழிவு செய்த
பரம்பரை பகையில்
இன்றெங்கள் உணவும் ..

உழைப்போர் தாழ்ந்தோரென
ஓதிவந்த திமிர்
ஒடுக்காது விட்டதால்
உழைக்கும் விலங்குவரை
விரிவுபடுத்தப்படுகிறது.

வரலாற்றின் பக்கங்களில்
வலிமை சேர்க்கும்  பலர்
அசைவர்கள் என்பது
அசையா உண்மை

உலகின் மிகுதியானோர்
உண்டிடும் உணவிது
மாமிசம் உண்பவர்
இழிவானோர் என்பது
மலிவான  மநு புத்தி.....
                மங்களக்குடி – நா.கலையரசன்