Tuesday, November 8, 2011

இவங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க....

வழக்கம் போல உலகச்சந்தையை காரணம் காட்டி  பெட்ரோல்  விலையை 1.80-க்கு உயர்த்தியுள்ளது மத்திய காங்கிரஸ் அரசு, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகள் இதை கடுமையாக கண்டித்துள்ளனர். உலக நாடுகளைச்சுற்றினாலே உள்நாட்டைச் சுற்றுவதாய்தானே அர்த்தம் என திருவிளையாடல் பிள்ளையாராய் புதுவிளக்கம் தரவும் தயாராய் , உலகம் சுற்றி வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 'வேர வழியே இல்லையேப்பா' என கை விரித்துவிட்டார்.  திருடர்களிடமே வீட்டுச் சாவியைக் கொடுக்காதீர்கள் என இடதுசாரிகள் எதிர்த்ததை பொருட்படுத்தாமல் சாவியை மட்டுமல்ல வீட்டையே ஒப்படைத்த காங்கிரஸ் அரசின் மதிமந்திரியான நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியோ பெட்ரோல் விலை குறைப்பு அரசின் கையில் இல்லை நாம்தான்  எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டோமே' என நினைவுப்படுத்துகிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆலோசனை தரும் தலைவர் சோனியா காந்தியோ அவரின் உடல்நிலை மேம்பட மருத்துவர்களின் ஆலோசனையில் அடைக்கலமாகிவிட்டார். இந்திய எதிர்காலத்திற்கான இளைய தலைவர் ராகுல்காந்தியோ  மாநிலம் மாநிலமாய் காடு-மலை-கிராமம் நகரம் பேருந்து –பைக் என ஒரு நல்ல டீ கிடைக்காமல் தேடி அலைகிறார். இந்த அரசின் பங்காளியான தி.மு.க தலைவர் கருணாநிதியோ கட்சியின் எதிர்காலத்தை ஜாமினில் விடுவித்து விட மண்சோறு சாப்பிடாத குறையாய் நீதிமன்றத்திலேயே ஒற்றைக்கால் தவமிருக்கிறார். இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் முதுகை முறிக்கும் விலைவாசி உயர்வால் முழிபிதுங்கி நிற்கும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு மேலும் நிம்மதியைக் கெடுத்துள்ளது.
    மத்திய அரசுக்கு எதிரான இந்த அதிருப்தியை தனக்குச் சாதகமாய் அறுவடை  செய்து கொள்ள நினைக்கும் பி.ஜே.பி-யோ இந்த விலை உயர்வை எதிர்த்து சண்டமாறுதம்  செய்கிறது. சரியாக புரிந்து கொள்வதானால் கடந்த காலத்தை நினைவில் தோண்டி  எடுத்துப் பார்ப்பது அவசியம். அன்றாடம் உயரும் இந்த பெட்ரோல் விலை உயர்விற்கான அடித்தளம் பி.ஜே.பி-யால் போடப்பட்டதுதான். பி.ஜே.பி மத்தியில் ஆட்சி நடத்த வந்த போது  பெட்ரோல் டீசல்;களின் விலைகளை கட்டுக்குள் நிறுத்த ஒரு பொது நிதியம் இருந்தது. எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்த நிதியத்திற்கு பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் வீதம் கட்டிட வேண்டும் என விதி இருந்தது. இப்படி சேரும் நிதியினை வைத்து சர்வதேசச் சந்தையின் விலை உயர்வினை ஈடு  செய்யப்பட்டதால் பெட்ரோல் ,டீசல் விலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.
    இந்த பி.ஜே.பி புன்னியவான்கள் ஆட்சியில் தான் அந்த நிதியத்தை கலைத்து அதிலிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை பொதுநிதியோடு இணைத்து செலவு செய்தார்கள். இன்று சர்வதேச சந்தையின் விலை உயர்வை ஈடுசெய்கிறோம் என நுகர்வோர் பாக்கெட்டிருந்து நேரடியாய் பறிக்கும் வழிப்பறிக்கு வாசல் திறந்து விட்ட இவர்கள் தான் மக்களின் துயரத்திற்கு மாய்ந்து மாய்ந்து அழுகிறார்கள். நமக்கு மறதி இருக்கும் என்ற நம்பிக்கையில்தான்.
    இதைவிட பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் இருப்பது மத்திய-மாநில அரசுகளின்  வரிதான் கடும் வரிவிதிப்பைச் செய்து விலையை உயர்த்திய மாநில ஆட்சியாளர்களும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்கள். எங்கே பிரதமரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு விடுவாரோ என அச்சம் ஏற்படுகிறது.
    இன்றைக்கும் நமது அண்டைநாடுகளான பாக்கிஸ்தான் 26ரூ , பங்களாதேஸ் 22, நேபால் 34, பர்மா 30, ஆப்கானிஸ்தான் 36ரூ  இந்தியாவைவிட ஆட்சியாளர்கள் அதிகம் நேசிக்கும் அமெரிக்காவிலேயே 30 ரூபாய்க்குதான் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கபடும்போது இந்தியாவில் மட்டும் 75 ரூபாயானது எப்படி ..? எல்லாம் மத்திய-மாநில அரசுகளின் வரிகளால் தான்.
            எனவே ஊரோடு சேர்ந்து அழுவதை நிறுத்தி விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்திட வேண்டும்.
•    சர்வதேசச்சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்ற இரக்கங்களை சமன் செய்வதற்கான  பொது நிதியத்தை மீண்டும் உருவாக்குங்கள்.
•    இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்-க்கான  வரி விதிப்பை குறையுங்கள்.
•    தனியார் ஆலை-நிறுவனங்களுக்கு வழங்கும் பெட்ரோலுக்கு ஒரு விலையும்  , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் ,  சாதாரண –மற்றும் நடுத்தர நுகர்வோறுக்கு –வழங்கும் பெட்ரோலுக்கான விலையையும் வகைப்படுத்தி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
•    மத்திய-மாநில அரசுகள் விதித்துள்ள நியாயமற்ற வரிகளை குறைக்க வேண்டும்.

       என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டால் நமது நாட்டிலும் சாதாரணமானவர்கள்  30 ரூபாய்க்கு பெட்ரோல் பெற முடியும்.  ஆனா இவர்கள் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்.

No comments:

Post a Comment