பகுத்தறி...
_________________________
நள்ளிரவு படை திரட்டி
உறக்கத்தில் தாக்குவதும்
அப்பாவி மனிதர்களை வழிமறித்து ரணப்படுத்துதலும் சாதிப் பெருமை என்று சிலர் சந்தைப்படுத்துவதை அறியாமல்
அதிகாரம் பெற்றவரிடம்
உன்னை பணயம் வைத்து
தன்னைவிற்றுக்கொள்ளும்
தருதலைகள் பேச்சை நம்பி
தோள்களை உயர்த்தி
வீதியில் உறுமித் திரிகிறாய்
உன் சாதிக்கு மட்டுமே
வீரம் உண்டென
எவன் சொன்னதுணக்கு
மதுரை வீரனும்
மணிக் குறவனும்
எரிஅம்பாய் வாழ்ந்ததை
என்னவென்று சொல்வாய்
பலருடன் சென்று
சிக்கிய சிலரைஅடித்து அம்மணமாக்கி என்ன தேடுகிறாய்..
உன்னிடத்தில் வேறுபட்டது ஏதாவது தென்பட்டதா ..
அடித்து புண்படுத்தி
கதற விட்டு
என்ன கண்டறிந்தாய்
வேதனை வேறுபட்டிருந்ததா..
அவனில் சிதறிய
சிறுநீரிலும்
தெறித்து சிதறிய
குருதியிலும்என்ன
புரிந்து கொண்டாய்
புதிதாக...
உன் கீழ் புத்தியையும்
சீழ் பிடித்த போக்கும்
நீ நாகரீகம் தொடாதவன்
என்பதை நாடறிந்து
திகைக்கிறது
மனிதனை மனிதன் தின்ற
காட்டுமிராண்டி
குணம் இது என
நாகரிக சமூகம்
நையாண்டி செய்கிறது
தீ வைத்தால் உன் வீடும் எரியும் உன்வீட்டுப் பொருள்களும் உடையும் ..
அரிவாள் உன் மீது பட்டாலும் ரத்தமும் காயமும் வரும்
அவனைப் போலவே
கையேறு நிலையில்
கவர்மெண்ட்டை எதிர்பார்த்து காத்திருப்பாய் ...எனில்
நீ தாக்கிக் கொண்டது
உன்னை தான். நீ அவமானப்படுத்திக் கொண்டதும் உன்னைத்தான்
அவன் உன்னில்வேறுபட்டவனல்ல
புரிந்து கொள்..
வெறியை உடைத்தெறி
நெறியை படித்தறி
சரி எதுவெனும்பகுத்தறி தூண்டியவனை தூக்கி எறி யாவரும் கேளிர் எனும்
அறம் அறி...
மங்களக்குடி
நா. கலையரசன்
No comments:
Post a Comment