Saturday, December 30, 2023

கவிதை... பகுத்தறி..

பகுத்தறி...

_________________________

நள்ளிரவு படை திரட்டி 

உறக்கத்தில் தாக்குவதும்

 அப்பாவி மனிதர்களை வழிமறித்து ரணப்படுத்துதலும் சாதிப் பெருமை என்று சிலர் சந்தைப்படுத்துவதை அறியாமல்


அதிகாரம் பெற்றவரிடம் 

உன்னை பணயம் வைத்து 

தன்னைவிற்றுக்கொள்ளும் 

தருதலைகள் பேச்சை நம்பி 

தோள்களை உயர்த்தி 

வீதியில் உறுமித் திரிகிறாய்


உன் சாதிக்கு மட்டுமே 

 வீரம் உண்டென

 எவன் சொன்னதுணக்கு 

மதுரை வீரனும் 

மணிக் குறவனும்

எரிஅம்பாய் வாழ்ந்ததை

என்னவென்று சொல்வாய்


 பலருடன் சென்று

சிக்கிய சிலரைஅடித்து அம்மணமாக்கி என்ன தேடுகிறாய்.. 

உன்னிடத்தில் வேறுபட்டது ஏதாவது தென்பட்டதா ..


அடித்து புண்படுத்தி

 கதற விட்டு 

என்ன கண்டறிந்தாய் 

வேதனை வேறுபட்டிருந்ததா..


 அவனில் சிதறிய

 சிறுநீரிலும் 

தெறித்து சிதறிய 

குருதியிலும்என்ன 

புரிந்து கொண்டாய்

புதிதாக...


உன் கீழ் புத்தியையும் 

சீழ் பிடித்த போக்கும் 

நீ நாகரீகம் தொடாதவன் 

என்பதை நாடறிந்து 

திகைக்கிறது


மனிதனை மனிதன் தின்ற 

காட்டுமிராண்டி 

குணம் இது என

 நாகரிக சமூகம் 

நையாண்டி செய்கிறது


தீ வைத்தால் உன் வீடும் எரியும் உன்வீட்டுப் பொருள்களும் உடையும் ..

அரிவாள் உன் மீது பட்டாலும் ரத்தமும் காயமும் வரும்

அவனைப் போலவே

 கையேறு நிலையில் 

 கவர்மெண்ட்டை எதிர்பார்த்து காத்திருப்பாய் ...எனில்

 

நீ தாக்கிக் கொண்டது

 உன்னை தான். நீ அவமானப்படுத்திக் கொண்டதும் உன்னைத்தான்

அவன் உன்னில்வேறுபட்டவனல்ல 

புரிந்து கொள்..

 

வெறியை உடைத்தெறி 

நெறியை படித்தறி 

சரி எதுவெனும்பகுத்தறி தூண்டியவனை தூக்கி எறி யாவரும் கேளிர் எனும் 

அறம் அறி...


மங்களக்குடி 

நா. கலையரசன்

No comments:

Post a Comment