Monday, January 22, 2024

கவிதை (பண்மைத்துவம்)

பண்மைத்துவம்..
_____________________


குடும்பங்கள் ஒவ்வொன்னுக்கும்
 குல சாமிகள் இருக்கு 
தெருவுக்கு ஒரு அம்மன் கோயில் கட்டாயமா இருக்கு

 ஊருக்குள்ள அய்யனாரும் மகாலிங்கமும் இருக்கு
 ஊரைச்சுத்தி-காளியம்மன் . 
மதுரை வீரன். வழிவிட்டான் சாமிகளேலாம் எங்களுக்கு 
பாதுகாப்பா இருக்கு

 தூரம் தொலைவு போய் கும்பிட பழனி மலை இருக்கு 

இப்படி சொந்த சாமி
 வகை வகையா
 நூறு சாமி இருக்க 
ஓஞ்சாமிய கொண்டு வந்து
 எங்க மேல திணிக்கே..

எல்லாரும் சேர்ந்து வணங்கும் சாமி எங்கே இருக்கு 
தனித்தனியா சாமிகளும் சடங்குகளும் இருக்கு-இதுல 
 ஒன்ச்சாமிய பாக்க எனக்கு 
தாக்கீது எதுக்கு ...

கோயில் கட்டும் ஆசையெல்லாம் பக்தருக்கு வரலாம்
அனுமதிதாரதுமட்டும் தான்
அரசாங்க வேலை
ஆராதனை மணி ஆட்டுவது  வேண்டாத வேலை..

எங்க சேலைக்காரி அருளைப் பெற உங்கள் சேணைஎல்லாம் வருமா சடை முனிக்கு படையல் வச்சு  சங்கரமடம் தருமா 
அலகு குத்தி நேர்த்தி வைக்க அக்ரஹாரம் வருமா? 
 நாங்கள் மட்டும் எதுக்கு 
விலகி நில்லு ஓரமா...

அப்போ நீ பேசுற பாசையவே என்னையும் பேசச் சொன்னே
.அப்புறம்
 நீ சாப்பிடும் உணவுபோல 
என்னையும் சாப்பிடச் சொன்னே
இப்ப  ஓஞ்சாமிய சேந்து கும்பிட  
அழைப்பு வேற தார ....
 
அடுத்தவன் கோயில இடிக்கிறது அதுல கோயிலை கட்டுவதும் பொழப்பத்த வேலை 
ஜனங்கள் நல்லா வாழ்ந்தாதானே சாமிகூட வாழும்...

அஞ்சு வருஷம் ஆளத்தானே  
ஓட்ட நாங்க போட்டோம் .எங்க அடையாளத்தை மாத்திடவா உன்கிட்ட வந்து கேட்டோம் 

அடி மேல அடி அடிச்சா 
அம்மிகூட நகரும் -நாங்க
சேந்து திருப்பி அடிச்சா- உன் 
அதிகாரமே தகரும் ...

_மங்கலக்குடி நா.கலையரசன்_

(பாபர் மசூதி இடித்த இடத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பிஜேபி மோடி அரசு நடத்திய 22/1/2024 அன்று எழுதிய கவிதை)

Friday, January 5, 2024

வாக்குறுதி. கவிதை


வாக்குறுதி
__________________

வாக்குறுதி என்பது 
ஒருவனின் 
நேர்மைகுறித்தானது 
வறியவனும் கூட 
நெறியாய் பேணுவது
 வாக்குறுதி காத்தல்.

வாக்குறுதி காக்க 
மூன்றாவது அடிவைத்த 
வாமனன் பாதத்தை 
கிரீடம் தரித்த தலையால் 
தாங்கினான்ஒரு மன்னன்

 வாக்குறுதி காக்க வென்றே உயிரையே உதிர்த்தான்
 தசரதன் என்பர்

வாக்குறுதி காக்க 
சதி என்றறிந்தும் 
உயிர் கவசத்தை 
உரித்தான் கர்ணன் 

வாக்குறுதி காக்க
 நாட்டை துறந்து 
மனைவி மகனை விற்று 
தன்னையும் விற்றுக் கொண்டான்
அரிச்சந்திரன் 

 இந்தப் புராணக் கதைகளை பாராயணம் செய்து
 பரப்பியவர் யாரும் 
பாதையாக்கிக் கொள்ளவில்லை 

இப்போது
வாக்குறுதிஎன்பது
வாக்கினை உறுதிசெய்யும் 
வலையானது 

வாக்கு மீறல் 
நேர்மை மீறலென 
சொன்னவனும் 
நம்பியவனுமே 
ஒப்புவதில்லை 

வார்த்தைப்படி 
வாழாதார் யாரும் வராதீர்
 எம் தேசத்தேர் இழுக்க -என தேசத்தின்  கதவடைப்போம்...

_ மங்களக்குடி நா. கலையரசன்_